Tuesday, May 29, 2018

சொல்லும் பொருளும்!


சர்க்கரை இனிப்பிற்கு கரையேது முண்டோ ?
ஊர்க்குருவி அறிந்த ஊரெந்த ஊரோ ?
வில்லுப் பாட்டுள் அம்பெறிவ துண்டோ ?
கொல்லன் பட்டறை கொல்லும் பட்டறையோ? 

பிள்ளைப் பூச்சிக்கு எத்தனை பிள்ளையோ? 
கிள்ளுக் கீரை கிள்ளுமோ கதறுமோ ? 
வெள்ளை மனசை புகைப்படம் காட்டுமோ? 
தள்ளாத வயதைத் தள்ளுவது மரணமோ?

சிண்டு முடிதல் முடிக்கவோ தொடரவோ? 
குண்டுச் சட்டி அதனெடை அறியுமோ ?
தண்டச் சோறு தீனியோ தொல்லையோ ? 
அண்டங் காக்கை  காக்குமோ அண்டம் ?

கத்துக் குட்டிகள் கத்துமோ பிதற்றுமோ ?
பத்தாம் பசலியை பதினொன்று தொடருமோ ?
பொத்தாம் பொதுவாய் பேசிடும் அனைத்தும் 
வித்தகர் சொல்லோ,விளங்கிடும் பொருளோ? 
                                                   ப.சந்திரசேகரன் .      


No comments:

Post a Comment