Sunday, May 22, 2022

இறைவன் இருக்கின்றானா ?

"இறைவன் இருக்கின்றானா?

மனிதன் கேட்கிறான்

அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை"


   கலைஞரின் எழுத்துவண்ணத்தில் உருவான'அவன் பித்தனா'{1966}எனும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசனின்,கற்பனை ஊற்றாய் உருவெடுத்த, இந்த அருமையான பாடல் வரிகள்.கேட்போர் நெஞ்சங்களில் அழுத்தமாய் விழுந்து அர்த்தமுள்ள,ஆழமான,விடை அறியா பல கேள்விகளை,விட்டுச் சென்றன,
    டி.எம்.சௌந்தராஜன்,பி.சுசீலாவின் கம்பீரமான,தெளிவான குரல்களில், என்றும் மனக்கடலில் முத்துக்குளிக்கச் செய்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்."யார்  இந்த இறைவன்?எங்கிருந்து வந்தான்? என்ன இவனது பூர்வீகம்?"மதங்களுக்கு முந்திய வனா?மதங்களால்  மனிதர் மனதில் மின்கலமாய்ப் பொறுத்தப் பட்டவனா?உலகம் முழுவதும் மார்தட்டும் மனித இனத்திற்கு, மாறுவேடங்களில் காட்சியளிக்கும்  இவனது உண்மையான உருவமென்ன?
    இதற்கான விடையையும் 'வளர்பிறை' {1962}திரைப்படத்தில்,கவியரசு கண்ணதாசனே வழங்கியிருக்கிறார். 

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் 
அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".

  இப்படி புரியாத இறைவனுக்கு பல பெயர்கள் சூட்டி,அவனை பல மதங்களுக்குள் சிறைவைத்து,தனது இறைமேலாண்மையையை நிலைநிறுத்த அன்றாடம் போராடிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

"தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஒட்டுக்குள்ளே தேங்காய்யைப்போலிருப்பான் ஒருவன் 
தெரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".
 
  என்று கவியரசு எழுதிவைத்ததற்கு முரணாக,மதத்தை தென்னையாக்கி, மதவெறியால்  இளநீரை  மாசுபட்ட  நீராக்கி,தேக்கிவைத்த தறிகெட்ட ஓடுகளில் தேங்காயை தேடும் மனிதன் பார்வைக்கு என்றேனும்,உண்மையிலேயே இறைவன் எட்டக்கூடுமோ? 

  இதே கண்ணதாசன் 'திருவருட்ச்செல்வர்' {1967}திரைப்படத்தில் ,

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே 
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே"
 
  என்று விடுகதை கூறி,அதற்கான விடையை 'சரஸ்வதி சபதம்' {1966}திரைப்படத் தில் தெளிவாகக்காண வைத்தார்.

"தெய்வம் இருப்பது எங்கே 
அது இங்கே வேறெங்கே"
  
என்று தொடங்கி, 

"தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ 
அங்கே" 

 என்று ரத்தினச்சுருக்கமாய் விடையளித்து அதனைத் தொடர்ந்து,
 
"பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் 
பொய்யில் வளர்ந்த காடு"
 
என்றும்,
 
"எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு"
 
   என்றும்,மாயத்திரைவிலக்கி,மனசாட்சியில் இறைவனை காணவைத்தார்.மேலும் அதே பாடலில் அவர்,
 
"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் 
ஆண்டவன் விரும்புவதில்லை 
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் 
ஆலய வழிபாடில்லை"
 
    என்று வழிபாட்டுப்பாதைக்கு வரிகளால் விளக்கேற்றிவைத்தார்.இங்கே குறிப்பிட்ட முதல் பாடலைத் தவிர மற்ற மூன்று பாடல்களில் இரண்டை, டி.எம்.சௌந்தராஜனும்,'இருக்கும் இடத்தை'பாடலை சீர்காழி கோவிந்த ராஜனும் பாடியிருந்தனர்.இதில் இன்னுமொரு சுவையான செய்தி என்னவெனில், புதிருக்கும் கேள்விக்குமான பாடல்களுக்கு முன்பே,அவற்றுக்கான விடைகளை கவியரசு கண்டிருந்தார் என்பதாகும்.இதற்கு மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் வெளியான ஆண்டுகளே சாட்சி.        
    இறைவனைப்பற்றிய கவிஞர்களின் கற்பனை ஒருபுறமிருக்க,இறைவன் இருக்கின்றானா இல்லையா எனும் எதிரும் புதிருமான சிந்தனைகளோடு, மனிதனின் மூளை அவ்வப்போது மல்லுகட்டுவதுண்டு.
    பிறக்கையிலே யாருமிங்கே ஆத்திகராய், நாத்திகராய்,பிறப்பதில்லை  மனிதரில்  சிலர் தங்கள் உடலில் பச்சை குத்திக்கொள் வதுபோல மண்ணில் பிறந்த அனைவருக்கும் மத,மொழி,சாதி அடையாளங்கள் கால அட்டவணையிட்டு  அளிக்கைப்படுகின்றன. 
    சடங்குகளும் சம்பிரதாயங்களும்,சாதி மதத்தின் பெயரால் இறைமையை பின்னுக் குத்தள்ளி,மனித அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கையில் உயர்வு தாழ்வு நிலைகளால் உந்தப்பெற்ற மனித சமூகம்,சமத்துவம் மறந்து உயர்நிலைப் போர் நடத்துகையில்,இறைவன் யார் என்றும்,இறைவன்மீது நம்பிக்கை வேண்டுமா என்றும்,கேள்விகள் எழுகின்றன.மதத்தினை விழுங்கும் சாதிப் பெருமை மதத்துடன் சேர்த்து இறைவனையும்  விழுங்குகிறது.
    இன்றைக்கு தமிழகத்தில் நாத்திகச் சிந்தனையில் ஊறிப்போன,பலருக்கும் நாத்திக ஊற்றாய் அமைந்த,தந்தை பெரியார் கூட,அவரது 25 வயதில் வாரணாசியில் அவருக்கு இழைக்கப்பட்ட மேற்சாதிக் கொடுமைகளால்தான் நாத்திகத்தின் நாடித் துடிப்பை முதன் முதலில் உணர்ந்தார். 
   ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் சிறிதுநேரம் மறந்து,மனித வாழ்வின் பல பிரச்சனைகளை யோசிக்கையில்,பிறப்பு இறப்பு கணக்குகளையும் காரணங் களையும் சிந்திக்கையில்,சாதியும் மதமும் சவக்குழி காணக்கூடும்.இந்த கோரமான உண்மையினைத்தான்,சவக்குழிக்கும் எரியூட்டலுக்கும் போராடிய,கோவிட தொற்றில் உயிரிழந்தோரின் உடல்கள் வெளிப்படுத்தின. 
   மதமின்றி இங்கு இறைவனுக்கு என்ன வேலை எனும் கேள்வி எழுகையில்,இறை வனுக்கும் இறைவழிபாட்டிற்கும் மதம் தேவைதானா,எனும் மறுபுறக்கேள்வியும் எழக்கூடும்.இதனால்தான் நேரு(Nehru), பெட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Russell) போன்ற அறிவுசார்ந்த சிலர், நாத்திகச் சிந்தனைக்கு அப்பாற்பட்டு,மதம் மற்றும் இறைவன் போன்ற நிலைப்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல்,தங்களது ஆழ்ந்த அறிவாற்றலை எழுத்துக்களாய், கட்டுரைகளாய் மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
    நற்சிந்தனை,மனித நேயம்,சமத்துவம் பேணல்,எனும் முக்கூடலில் மனசாட்சியை மைய்யமாக வைத்து வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும்,பூஜ்ஜியத்தை ஆளும் கண்ணுக்குப் புலப்படா இறைவனைக் காணமுடியும். எம்மதத்திராயினும்,நம்மில் பலரும் இக்கட்டான,இன்னல்களில் சிக்குண்டு போகும் காலங்களில் மட்டுமே, இறைவனை திமாக நினைக்கிறோம்.
   மாறாஅன்றாட வாழ்வில் இறைவனை பங்காளி ஆக்கிவிட்டால் 'சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருள்வது  இனியே'எனும் அறைகூவல் மனிதன்/ இறைவன் உறவின் வாடிக்கையாகும்.நம்முள் குடிகொண்ட குண சீலங்களை நாமே சுட்டிக்காட்டி,"இறைவன் இருக்கின்றானா"என்று ஒருபோதும் நாம் கேட்கப்போவ தில்லை.வேண்டுமெனில்,இப்பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட 'அவன் பித்தனா'திரைப்படத்தின் எதிர்வினைதாக்கமாக ஒலிக்கும் 

"மனிதன் இருக்கிறானா?.
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இ[எ] ந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை". 

   எனும் கவியரசின் வரிகளை,இறைவனை தேடும் நிலைப்பாட்டிற்கு,பதிலடிப் படலமாக எடுத்துரைக்கலாம் !
  
ப சந்திரசேகரன்.   

Wednesday, May 18, 2022

வெளிச்சம்

 

கனவுகள் கார்த்திகை தீபமானால், 

விழிக்கையில் வெளிச்சம் விசாலமாகும்!.

பகைதனை புகாது விரட்டிடின்,  

படிதனில் பிரகாசம் கூடும்; 

வெறுப்பிலாச் சமூகம் விரிந்திட 

விளக்கின் திரிகள் பலமடங்காகும்.

வசையிலா வார்த்தையின் பயணத்தில் 

திசையெலாம் மொழிகள் தேரிழுக்கும். 


தரைக்கு வானம் அண்ணாந்து பார்க்கவோ 

திரைக்குள் ஒளிதனை திரட்டிக் கூட்டவோ?

அறிவின் வெளிச்சம் அகத்தினில் படர்ந்து ,

குறைவிலா குணங்கள் குழுமம் படைக்கும் .

மறைவுகள் இல்லா மனதின்  உண்மைகள், 

பிறை நிலவாகிப் பெறுக்கிடும் வெளிச்சம். 

விரிந்ததோர் பார்வை வெளிச்சம் படைத்திட 

எரிந்திடும் பொய்களில் எழுவதே மானுடம்! 

ப சந்திரசேகரன்   

Sunday, May 8, 2022

பல்லக்கு

மொட்டை மாடியில் 

மல்லாந்துப் படுத்து 

வானத்தைப் பார்த்திட ,

விழிகளே வானத்து  

விந்தைகளின்  பல்லக்கு.

கெட்டியாய் மடிதனில்

குழந்தையைப் பற்றி 

கனிவுடன் கொஞ்சிட, 

தாய்மடி தருவதே 

மழலைக்கு பல்லக்கு.

அரியதாய்க் கருத்துக்கள் 

அறிவுடன் வலம்வர, 

ஆதாரம் காட்டும் 

மூளையின் மேடையே, 

அறிவிற்கு பல்லக்கு.

பெரியதாய் மானுடம் 

பேருடன் தழைத்திட ,

போரிலா வேர்களாய்

படர்ந்திடும் கருணையே, 

சமத்துவப் பல்லக்கு.

சமரசம் சார்ந்து, 

சாத்திரம் மாற்றியே,   

சமூகம் சுமக்கையில் 

ஆனந்தம் ருதல்,   

ஆன்மீகப் பல்லக்கு.

                   ப சந்திரசேகரன்   






Friday, May 6, 2022

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,முதல்வராய் ஓராண்டு.

   

  கூட்டணிகள்!வாக்குறுதிகள்!வரிசையாய் பிரச்சனைகள்! 2016 முதல் 2021 வரை காணாமல்போன,தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த அரசியல் முகத்தினை,அதன் சுயமரியாதையினை மீட்டெடுத்து,மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத் துதல்,இதுவரை எந்த தமிழக முதல்வருக்கும் இல்லாத புதிய சவால்!

  தி.மு.க வுக்கும் அ.இ. அ.தி.மு.க வுக்கும் செயல்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் உடல் ஆரோக்கியமாக இருந்த வரை,மாநிலத்தின் குரல் கம்பீரமாகத்தான் ஒலித்துக்கொண்டிருந்தது.

  ஆனால்,அவர் மறைந்த பிறகு பதவிக்காக மாநிலத்தின் உரிமைகளை ஒட்டு மொத்தமாக தேசியக் கடலில் கரைத்தவர்களால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கினை அகற்றி,மீண்டும் புதிய உத்வேகத்தோடு  இழந்த பெருமையை  புணரமைப்பதே,திரு.ஸ்டாலினின் முதல் கடமையாயிற்று.

  நான்கு ஆண்டுகளாக தேய்ந்துபோன உரிமைகளும்,அந்த தேய்மானங்களுக் கிடையே முலாம்பூசப்பட்ட மதச்சாயங்  களும்,முதல்வர் பொறுப் பேற்று ஓராண்டேயான,ஸ்டாலின் அரசிற்கு,பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன  என்பதே,அப்பட்டமான உண்மை.

   கூட்டணிகளை முதல்வர் ஸ்டாலின் பக்குவமாக கையாண்டு தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்று சொல்வதைக்காட்டிலும்,அவரின் பக்குவமும், நிதானமும்,விட்டுக் கொடுக்கும் மனப்போக்கும்,அரசியல் பாடப்புத்தகத் தில் வரவேற்கத்தக்க முன்னுதாரணப் பக்கங்கள் ஆயின எனலாம்.தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளும்,அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களும், அவருக்கே புதிய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும்.

  இருப்பினும்,முதன்மையான வாக்குறுதிகளில் பலவும்,குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருப் பதும்,பல்வேறு சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதும்,முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும்,  தங்களது தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றுவதில்,எப்போதும்.  முழுமனதுடன் உறுதி பூண்டிருப்பதை,   மைய்யப்படுத்துகின்றன.

  'நீட்'தேர்வு விலக்குக்கான உறுதி மொழியும்,அது தொடர்பாக அவையில் நிறை வேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும்,மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகள்,ஒன்றிய அரசுக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் கொண்டிருப்பின், அவைகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை, இந்திய அரசியல் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம், பலரின் பார்வைக்கு புலப்படுத்தின.ஒன்றிய அரசின் பிரதி நிதிகள், திட்டமிட்டு  காலதாமதத்தை.  ஏற்படுத்தி,'நீட்'போன்ற சமூகம் சார்ந்த, மாணவச் சமூதாயத்தின் எதிர்காலம் சார்ந்த,முக்கிய பிரச்சனை களை,முரண்டு பிடித்து  முடக்கிப்போடுகின்றனர்.

  'நீட்'விலக்கு மசோதா மட்டுமல்லாது பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான மசோதா உட்பட,நான்கு ஆண்டுகளில் கரைந்து போன மாநில உரிமைகளை,  ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது,ஸ்டாலின் அவர்களின் அரசு.

   உள்ளாட்சி அதிகாரங்களுக்கான அங்கீகாரம்,தேர்தல் மூலம் முழுமை பெற்றிருக்கிறது.மக்களின் பிரச்சனைகள் கவனத்திற்கு வந்தவுடன் விரை வாக தீர்க்கும் நடைமுறையும்,அவ்வப்போது மக்களோடு இணைந்து அவர்களின் பிரச்சனைக்குரல்களை கேட்டு,அவற்றின் நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றுதலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இல்லம்  தேடிச்சென்று,அவர்களின் மனநிலையை பகிர்வதும், வெறும் அரசியலாக அல்லாது,இயல்பான நிகழ்வுகளாகவே அறியப் படுகின்றன.

  இன்றைக்கு திரு.ஸ்டாலின் அவர்களின். அரசுக்கு இருக்கும் பெரும் குடைச்சலே, சமூகப்பிரச்னைகளை புறந்தள்ளி,மத அரசியல் புரிவோரின் தாறுமாறான பேச்சுகளும் நடவடிக்கைகளுமேயாகும். ஆனால் இதைவிட மிகப்பெரிய'மிசா பிசாசை'சந்தித்தவருக்கு,மதவாதத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்குமிடையே, நெளிவு சுளிவோடு பயணிப்பதில்,சிரமம் இருக்கப்போவதில்லை.

   மதவாதிகள் நினைப்பது போல,   மதமாற்றம் சம்பந்தப்பட்ட  குற்றச்சாட்டு கள்,பல்லக்குகளின் பட்டினப்பிரவேசம் போன்ற வற்றால், தகர்க்கப்படக் கூடிய மண் கோட்டை அல்ல தமிழகம். அவ்வாறு அவர்கள் நினைப்பார்க ளாயின்,அது அவர்களின் மனக் கோட்டையே!தமிழகத்தின்.அரசியல். மாண்பு பல்வேறு பலவீனங்களுக் கிடையே நிலைத்து நிற்பதற்குக் காரணமே, இங்கே காலம் காலமாக வேரூன்றியிருக்கும் சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை, சமூக நீதி எனும் நான்கு தூண்களாகும்.

   நிதானத்தை மட்டுமே ஆளும் கருவியாக எடுத்துக்கொண்டிருக்கும் திரு.ஸ்டாலினால்,கூட்டணியை மட்டுமல்ல,தேவைப்பட்டால்,எதிரணி யையும் அரவணைத்து அரசாளும் ஆற்றல்,அவரையும் அவரது அரசையும், வரையறுக்கப் பட்ட அளவு கோல்களுடன்,அடையவேண்டிய இலக்குகளை,அடையச்செய்யும்.  தற்கு,திரு.ஸ்டாலினின் ஓராண்டு அரசு ஆரம்பப் புள்ளியாகும்.

  பொருளாதாரம் சீர்செய்யப்பட்டு,கல்வி, தொழில் ஆகியவற்றின் முன்னேற்றமும், மக்களின் அன்றாட பயன்பாட்டிலுள்ள கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப் படுத்தலும் முழுமைபெறும் தருவாயில், ஸ்டாலின் அவர்களும்,அவர் தலைமையேற்கும்  இயக்கமும்,அளித்த இதர வாக்குறுதிகளை,ஒவ்வொன்றாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை, அவருக்கு உள்ளது போல் மக்களில் பலருக்கும் உண்டு. இந்த நம்பிக்கை விரைவில் நிசமாகும். 

    உதாரணத்திற்கு பள்ளிக்கல்வி தொடர்பாக,அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வண்ணம்,ஒரு செயலியை பயன்படுத்தும் வகையில்,கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது,பள்ளிக்கல்வியின் தரத்தினை உயர்த்தும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.  

  கோவிட் தொற்றினை மக்கள் நலத்துறை அமைச்சர்,அவரது செயலர் துணையுடன் வென்றெடுத்ததுபோல, இளைய நிதியமைச்சருடன் அவரின் அணிசேர்ந்த பொருளாதார நிபுணர்களின் துணையோடு, பொருளாதார பிரச்சனை களை வென்றெடுப்பார்,முதல்வர். ஆன்மிகம், திராவிடம் ஆகிய இரண்டிற் குமிடையே, அறநிலையத் துறை அமைச்சரின் துணையோடு,அங்குசம் பற்றி,'மத'யானை வெல்வார் .          

  எல்லோரும் சொல்லுவதை செவி கொடுத்துக் கேட்டு,தெளிந்த நீரோடை யான  மனம் கொண்டு,பிரச்சனை களுக்கு முடிவெடுக்கும் தலைமை,வெற்றிப் படிகளின்  உயரம் கண்டு, இந்தியக் குடியரசில் தமிழகத்தை,  மேலும் முன்னிலைப் படுத்தட்டும்! 

                                   ===============0===============