Wednesday, April 26, 2023

தொழிலும் தெய்வமும்

(உழைப்போர் உயரட்டும்.)

≈=====≈======≈======≈=====≈

செய்யும் தொழிலே தெய்வம் என்றால்,

தொழுதிடும் தெய்வம் தொழிலென் றாகுமோ?

பெய்திடும் மழையே பெரிதொரு தொழிலாய்,

பூமியில் பசுமைப் புரட்சிகள் விதைக்கும்.

கொய்திடும் நிலத்தில் கூறுகள் அமைத்து,

கூடுதல் பசுமை,படைப்பதே தொழிலாம்.

'மெய்வருத்தக் கூலி'முயற்சிகள் தருமோ?

மேதினப் புகழ்ச்சி போக்குமோ அயர்ச்சி?


உழைக்கும் நேரம் உருப்படி ஆக்கலும்,

உருப்படி உழைப்பு,ஊதியம் பெறுதலும்,

வழக்குகள் இல்லா வரையறை கணக்கில்,

நெருப்பினில் நீரை இறைப்பது போலாம்.

விழித்திரை காணும் வெளிப்படை விதிகள்,

பெருக்குமே உழைப்பு,ஆற்றல் போற்றலில்.

ப.சந்திரசேகரன். 

Saturday, April 22, 2023

அமரர்,பேராசிரியர் திரு.மூ.பொன்னம்பலம் அவர்களின் நினைவுத் துளிகள்.

 


    ஜூலை இரண்டு,1970;விரிவுரையாளர் நியனமத்திற்கான நேர்க்காணல்; பொன்மலையிலிருந்து புத்தனாம்பட்டிக்கு வழி அறியாமல் துறையூர் சுற்றி தாமதமாக சென்றடைகிறேன்.உள்ளே அழைக்கிறார் முதல்வர்.சான்றிதழ்கள் பரிசோதனை! பின்னர் ஓரிரண்டு கேள்விகள்."The appointment of lecturer was over this morning itself.One Mr.R.Jenardhanam was appointed" என்கிறார்."Thank you Sir" எனக்கூறி நான் இருக்கையிலிருந்து எழுகிறேன்."No.No Please sit down.There is one vacancy for tutorship.I will make it as Lecturer and appoint you" என்று கூறி தனது அலுவலக உதவி யாளர் திரு.நடேச பிள்ளையை  அழைத்து, கல்லூரி அலுவலக மேலாளர் [பின்னர் அலுவலக கண்காணிப்பாளர் என்று மாற்றப்பட்டது }திரு N.துரைராஜனை வரச்சொல்கிறார்.அவரிடம் நியமன ஆணை தயாரிக்கச் சொல்லி எனக்கு வழங்குகிறார்.

  ஓருசில நிமிடங்களில்,ஒரே பார்வையில் நடந்து முடிந்தது,எனது விவிவுரையாளர் பதவி நியமனம். அந்த சில நிமிடங்களில்  அவர் மன ஓட்டம் என்னவாகியிருக்கும் என்பதை அவரே அறிவார்.அதே ஆண்டு என்னை கல்லூரி மாணவர் விடுதியின் மாணவர் ஒழுங்கு நிலை பராமரிப்பவர் களில் (Proctors) ஒரு வராக நியமித்து கல்லூரி விடுதியில் தங்கச் சொல்கிறார். அவ்வப்போது அவர் விடுதிக்கு வரும்போது உடல் ஆரோக்கியம் பேணுமாறும்,இரவில் பால் அருந்துமாறும் கூறிச்செல்வார்.

   அந்தஆண்டு கல்லூரி மாணவர் மன்ற திறப்புவிழா கூட்டத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்யுமாறு என்னை திருச்சிக்கு அனுப்புகிறார்.நானும், உறுமு தனலட்சுமி கல்லூரியின் அன்றைய முதல்வரும் எனது ஆசிரியருமான பேராசிரியர் திரு சி.எஸ் கமலபதி அவர்களை அழைக்க,அவர் மறுத்துவிட, பிறகு திரு.பொன்னம்பலம் அவர்களின் அனுமதியை தொலைபேசியில் பெற்று, அதே நாள்,பெரியார்  ஈ.வே.ரா கல்லூரியின் அன்றைய முதல்வர் திரு ஆளுடையா பிள்ளை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் ஒப்புக்கொள்கிறார்.  

   அந்த கல்வி ஆண்டு இறுதியில் ஒருநாள், கல்லணைக்கு சுற்றுலா செல்கிறோம். அங்கு மதிய உணவு முடிந்த பிறகு யாரோ ஒருவர் நான் நன்றாகப் பாடுவேன் எனக்கூற,சுமாராகக்கூவும் என்னை பாடச்சொல்கிறார்.நானும் அந்த ஆண்டு வெளிவந்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,"ஒரே பாடல் உன்னை அழைக்கும்"என்ற பாடலைப் பாடுகிறேன் .பாடலை தன் தொடையில் தாளம்தட்டி ரசித்து,என்னை வெகுவாகப் பாராட்டுகிறார்   

  அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று குறைகிறது.என்னை அழைத்து வேறு கல்லூரியில் வேலை தேடச் சொல்கிறார். ஆனால் அதிஷ்டவசமாக,எனது சீனியர் திரு ஆர் ஜெனார்த்தனம் அரசு கல்லூரியில் சேர,என்னை அழைத்து மகிழ்ச்சியுடன்'God is great' எனச் சொல்லி இரண்டாம் ஆண்டு நியமன ஆணை வழங்குகிறார்.

  எனது திருமணத்திற்கு தம்பதி சமேதிரராய் வந்து வாழ்த்தி,பிறகு  துறையூருக்கு அருகே ஒரு கிராமத்தில் நடந்த ஒரு திருமண  நிகழ்ச்சியில் நாங்கள் சந்திக்கையில்,எனது எட்டுமாத ஆண் குழந்தையை கையில் வாங்கி,சில மணித்துளிகள் தூக்கிவைத்து,"எங்கள் கிரீன் கார்டனுக்கு இதுபோல் ஒரு குழந்தை எங்களுக்கு  பேரனாய் வேண்டும்" என்கிறார்.

   காலம் செல்ல செல்ல ஆசிரியர் சங்க போராட்டக்களமும் எதிர் வினைச் செயல் பாடுகளும்,எங்களுக்கிடையே,(வேறு பல ஆசிரியர்களுக்கும் நடந்தது போல) பாலம் தகர்த்து ஒரு கனத்த இடைவெளியை தோற்றுவித்தன.இருப்பினும்,ஒரு நீண்ட போராட்ட காலம் முடிந்து,இழந்த வேலை நாட்களை ஈடு செய்வது குறித்து நானும் பேராசிரியர் திரு.வி.கிருஷ்ணகுமாரும் முதல்வர்,பேராசிரியர் திரு பொன்னம்பலம் அவர்களை அவரது அலுவலகஅறையில் சந்திக்கையில்,"நீண்ட கால வேலையை குறுகிய காலத்தில் முடிப்பது,பேராசிரியர் சந்திரசேகரன் போன்றோரால் முடியாது. அவர் மாணவர்கள் ஒருபகுதியை புரிந்துகொண்டால் மட்டுமே அடுத்த பகுதிக்குச் செல்வார்"என்று கூறிட என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

  எத்தனை எதிர்த்தும் என் பணியாற்றல் மீது  இத்தனை வலுவான  மதிப்பீடா? அவரை எதிர்த்து போராடும் ஒவ்வொவொரு காலக்கட்டத்திலும் மலையென மனபலம் கொண்ட ஒருவரிடம் மோதுகிறோமே,விளைவு என்னவாக இருக்கும் என்றொரு அச்சமும், நெஞ்சுரம் நிரம்பப்பெற்ற ஒரு நபருடன் தான் மோதுகிறோம் என்னும் பெருமிதமும், எனக்குமட்டுமல்லாது என்னைப்போல் அவரை எதிர்த்து நின்ற ஒவ்வொரு ஆசியிரருக்கும்,அலுவலருக்கும் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

   பணியிலிருந்து ஓய்வு பெரும் நாளன்று என் மகனுடன் சென்று நான் அவரை சந்திக்கிறேன்."Take your father to the US.Take care of him"என்று என் மகனிடம் கூறுகிறார்.ஓய்வூதியம் பெறத்தொடங்கிய பின்னர்,ஒரு சில ஆண்டுகள் அவருக்கு கடிதமும் புத்தாண்டு வாழ்த்துக்களும்  அனுப்பியிருக்கிறேன்.ஓய்வுபெற்ற சில நாட்களில் ஓமாந்தூரில் அருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் இல்லத்தில் ஒரு பெரிய காரியத்தில் அவரை சந்திக்கையில்,'ஓய்வுபெற்ற பின்னரும் வந்திருக்கிறீர்களே'' என்று நெகிழ்ந்தார்.

    ஒரு சில ஆண்டுகள் கழித்து எனது நண்பர் முனைவர் திரு டி. பாலசுப்ரமணியத்தின் மூத்த மகள் திருமணத்தில் திரு.பொன்னம்பலம் அவர்களுடன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அவர் அடிக்கடி என் கனவில் வருவதை குறிப் பிட்டேன்.சிரித்தார்.வயது ஆகிவிட்டதால் எனது கடிதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும்,தன் கைப்பட கடிதம் எழுத இயலாமைக்கு வருந்தினார். 

  இதற்கிடையே கல்லூரி நிறுவனத்தந்தை பெருமைமிகு மூக்கப்பிள்ளை அவர்களின் வாழ்கைப்புத்தகத்தை,அமெரிக்காவில் வாழும் முனைவர்  தங்கவேலு  என்பவர் எழுத இருப்பதாகவும்,அதற்கு என்னை ஆங்கில மொழியூட்டம் செய்து தருமாறும் பணித்தார்.ஆறுமாதத்திற்குமேல் திரு. தங்கவேலு அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அந்த நூல்,அமெரிக்க பதிப்பக விதிகள் உள்ளடக்கிய பிரச்சனைகள் காரணமாக வெளிவரவில்லை என்று அறிய நேர்ந்தது. 

   இறுதியாக நான் திரு.பொன்னம்பலம் அவர்களை சந்தித்தது,அவரது எண்பதாம் பிறந்த நாள் முடிந்து ஒரு சில மாதங்களில் அவரது இல்லத்தில்!."தீர்க்காயுசா இருங்க" என்று வாழ்த்தினார்.அவருடன் மிகவும் நெருங்கி பின்னர் விலகி நின்ற ஒரு சில ஆசிரிய நண்பர்களில் நானும் ஒருவன். ஆனால்,எங்களுக்கிடையே  ஏதோ  ஒரு இனம்புரியா ஆழ்ந்த உணர்வுப்பாலம் இருந்ததாகவே நான் அவ்வப்போது நினைத்திருக்கிறேன்.அவர் என்னைப் பற்றி என்ன வெல்லாம் நினைத்திருப் பாரோ!ஆழ் கடலல்லவா,அவர் மனம்!. இப்போது பலரின் நினைவுக்கதவுகளை தட்டி எழுப்பி,அவர் உறங்கிக்கொண்டிருக் கிறார்.

 ஓம் ஷாந்தி! ஆமென்!ஹே அல்லாஹ்!புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி;சங்கம் சரணம் கச்சாமி!         

ப.சந்திரசேகரன்.     

Friday, April 14, 2023

ஒழுக்கத்தின் மறுபக்கம் சனாதனமா?

 

   என்னுடைய பன்னிரெண்டு வயதில் ஒருமுறை,எனது தந்தையாருடன் ரயிலில் பயணம் செய்கையில்,அவருடைய நண்பரும்,அந்த நண்பரின் என்னைக் காட்டிலும் இளைய மகனும்,உடனிருந் தனர்.ஒரு ரயில் நிலையத்தில் தாகம் என்று கூறிய எனக்கு ஒரு குளிர்பான பாட்டில் வாங்கித்தந்து,அதை அச்சிறுவனுடனும்  பகிரச்சொன்னார் என் தந்தை.நான் தாகத்தில் அப்பானத்தை முழுமையாகக் குடித்துவிட,அதைக்கண்ட என் தகப்பனார் அச்சிறுவனுக்கு வேறொரு பாட்டில் குளிர் பானம் வாங்கிக்கொடுத்து,என்னிடம், மற்றவருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தி,என்னை கடிந்து கொண்டார்.     

    பின்னர்,எனது பதினான்கு வயதில் நாங்கள் வசித்த ரயில்வே காலனி ஓட்டு வீட்டின் விட்டதில் காணப்பட்ட,சிட்டுக் குருவியின் கூட்டினை நான் கலைக்கப் போக,"டேய் அத ஏண்டா கலைச்சே? ஒரு உயிரினத்தை வதை பண்றியே!"எனக்  கூறி 'சொட்டேல்' என்று செவிட்டில் அறைந்தார் என் தந்தை.இவை இரண்டுமே என் வாழ்க்கைப்பாதையின் ஒழுக்கப்பாடங் களாக அமைந்தன.இவ்விரண்டு ஒழுக்க மூட்டும் அனுபவங்களில் சனாதனம் இருந்ததோ இல்லையோ,அது என் தந்தைக் கும் தெரியாது;எனக்கும் தெரியாது.அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.

   இந்த விரிந்த விசாலமான உலகத்தில் எத்தனை நிறம் கொண்ட மனிதர்கள் ! உலகின் எல்லா நாடுகளிலும் ஒழுக்கம் நிறைந்தோர் உண்டு.மதமும் மொழியும் வேறுபட்ட மனிதரிடையே,ஒழுக்கம் என்பது உள்ளத்தில் உள்ளூறி,உணர்வுகளையும் சிந்தனையையும் திரட்டி வைத்து,சொற் களால்,செயல்களால்,ஒரு மனிதர் எப்படிப் பட்டவர் என்பதை அடையாளம் காட்டுகிறது. பழக்கவழக்கங்களும் கற்ற கல்வியும் சேர்ந்து,சாதி மதங்களுக்கப்பாற்பட்டு, நல்லதையும் தீயதையும் பிரித்துப் பார்க்கச் செய்வதே,வாழ்வியலாகும்.நல்லவர்கள் நெஞ்சில் குடியேறும் இறைவன் எனும் மன மகிமை,கருவறையையும்,தன் மூல இருக்கையையும் கடந்து,நல்லவர்களுடன் சங்கமித்து,நன்மையின் ஒளியாகிறது. அந்த ஒளிக்கு சாதி,மத,மொழியில்லை. அது ஒரு பளிச்சிடும் பரவசம்.நன்மையின் மேடையில் நர்த்தனமாடி மெய்சிலிர்க்கச் செய்வதே இறைவன் எனும் உணர்வின் இயல்பு.

   என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கும் எனக்குமிடையே,எனது ஒரு சிறிய வீட்டு மனைக்கான விற்பனை ஒப்பந்தம்,வாக்கு ரீதியாக நடைபெற்று, நான் அவரிடம்,எங்கள் இருவருக்கும் இசைந்த,அந்த மனைக்கான தொகை யினை கடந்த நூற்றாண்டு எண்பதுகளில் பெற்றுக்கொள்கிறேன்.அதை அவர் தொண்ணூறுகளில் இன்னொருவருக்கு எட்டு மடங்கு விலைக்கு கிரயம் செய்கி றார்.நான் சார் பதிவாளர் அலுவலகம்  சென்று,அந்த விற்பனை ஆவணத்தில் கையெழுத்திடுகிறேன்.அவர் அந்த கிரய வித்தியாசத் தொகையில் ஐந்து விழுக் காட்டினை,என்னுடன் பகிர்கிறார்.அவர் என்மீது வைத்திருந்த மித மிஞ்சிய நம்பிக்கைக்கும்,அந்த நம்பிக்கை கெடாமல் பார்த்துக்கொண்ட எனக்குமிடையே நிலவிய ஒழுக்கக் கதிர்வீச்சின் அளவு கோல் என்ன?அதை கற்றுத்தந்தது சனாதனமா?அது பற்றி எனக்குத் தெரி யாது.தெரியவேண்டிய அவசியமுமில்லை. இதிலும் அந்த நண்பர்,ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனது சொந்த அனுபவங்களில் மூன்றை மட்டுமே  இங்கே குறிப்பிட்டேன். இன்னும் பல இருக்கக்கூடும்.இதுபோல் ஒவ்வொரு வர் வாழ்விலும் வேரூன்றிய அனுபவங்கள் வாழ்க்கை எனும் இலக்கியத்தில்,கவிதை களாய்,சிறுகதைகளாய்,புதினங்களாய், கட்டுரைகளாய்,நாடகங்களாய்,தினப்பக் கங்களை உள்ளடக்கி காப்பியங்கள் படைப்பதை,சம்பந்தப்பட்டோர் அறிவர். ஒழுக்கத்திற்கு சாதியில்லை;மதமில்லை. அவரவர் மனதின் அழுக்குகளை சுத்தம் செய்யும் நேரத்தில்,ஒவ்வொரு மனிதரும் சூத்திரரே.

   வயிற்றுப் பசிபோக்கும் உணவும்,மானம் காக்கும் உடையும்,மூளையினை மூலைக் குள் முடங்கச்செய்யா கல்வியும்,எல்லோர்க் கும் கிடைக்கச் செய்வதில்,மதத்தினைக் கடந்து முந்தி நின்று,அரசாளும் ஆற்றலே, மனிதம் தழைக்கச் செய்யும். நன்னூல், ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன், திருக்குறள்,நாலடியார் மற்றும் பல நெறியியல் நூல்கள் நிரம்பிய வற்றா நதி யாம்,தமிழ் மொழி!.வாழ்க்கையின் வரம்பினுள் ஒழுக்கம் ஒரு வீச்சு;அல்லது உரைகல்.அதற்கு ஒவ்வொரு மனிதரின் உள்ளமே ஊற்று.

  மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதரும் யாரோ ஒருவரால், அல்லது சிலரால் ஈர்க்கப்படுகின்றனர். இப்படி ஈர்க்கப்பட்ட பலரும் வேறொரு நபரையோ,அல்லது சிலரையோ,ஈர்க்கின்றனர்.இந்த ஈர்ப்பே, ஈர்ப்பவரின் குணம் அனுசரித்து, நன்மை தீமையாகிறது. ஈர்ப்புக்குள் அடங்கிய பலரும் வார்ப்புகளாகி,சமூகம் என்றாகின் றனர்.அவர்கள் மேடையேறி சனாதனப் பாடமோ, வேறு மதப்பாடங்களோ நடத்துவ தில்லை.அப்படி நடத்தினால் மட்டுமே, ஒழுக்கம் என்பது உயரப்போவதுமில்லை. அன்றாட காலக் கடலில் மனிதர்கள் நல்லவர்களாய், தீயவர்களாய் கரைகின் றனர்.நல்லொழுக்கம் பேணுவோர்க்கு, 

ஒழுக்கம் விழுப்பந்  தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் 

  எனும் வள்ளுவர் வாக்கு,அவர்கள் அறிந்தும் அறியாமலும்,அவர்களை வழி நடத்துகிறது எனும் கருத்தியலையும் மறுப்பதற்கில்லை.

ப.சந்திரசேகரன்.             

          

Thursday, April 13, 2023

திருநாள் மேடைகள்

(இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.)

அன்பைக் கூட்டி,அறிவால் வகுத்து,

பண்பைப் பெருக்கி,பகைமை கழித்தலே,

படிப்பினை மிஞ்சிய பழம்பெரும் கணக்காம்.

கிடைத்திடும் நன்மைகள்,திருநாள் மேடையாம்.


ஊரைச் சுற்றி உலாவரும் தேர்களும்,

தேரை இழுத்து திளைத்திடும் ஊர்களும்,

கூட்டம் திரட்டி குணங்களைச் சேர்க்கையில்,

ஈட்டிடும் அரியணை,சமத்துவ மேடையாம்.


சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும்,

சத்தியம் உரைத்திடின்,சங்கடம் சரியுமாம்.

விடியலின் ஒளியினில் காரிருள் கரைந்திட,

படிந்திடும் வெளிச்சம்,நீதியின் மேடையில்.


வருடம் பிறந்திட,விழாக்கள் விரிந்திடும்;

ஆருடம் கடந்த ஆற்றல் முனைப்பினில்

ஆட்டக் களத்தை மாற்றிடும் கொள்கைகள்.

'நாட்டு நாட்டென' நிறையுமாம் மேடைகள்.

ப.சந்திரசேகரன்.



Saturday, April 1, 2023

Dance! Dance!

Come on!

Let us dance together.

I am not your teacher because,

Teacher is a sanctified,dignified designation.

I am your guide.

I always stand beside you,

Helping your limb movements

Maintain their spirit and speed.

Why don't you darken your eyebrows and lashes 

You will look more beautiful.

No no.Do not read in between my words.

I am not the Casanova to break your heart.

I am a custodian of your limb movements

To let your dance reach greater heights

Because classical dance is of the highest order.

You look so cute while dancing.

No.no.I mean not you;your dancing movements.

You are the pride of our institution. 

I say this only as your guide and not as your teacher.

Remember! 'the pride of our institution'.

Never move your dancing steps forward,

To belittle the classical status of our institution.

P.Chandrasekaran.