Wednesday, May 18, 2022

வெளிச்சம்

 

கனவுகள் கார்த்திகை தீபமானால், 

விழிக்கையில் வெளிச்சம் விசாலமாகும்!.

பகைதனை புகாது விரட்டிடின்,  

படிதனில் பிரகாசம் கூடும்; 

வெறுப்பிலாச் சமூகம் விரிந்திட 

விளக்கின் திரிகள் பலமடங்காகும்.

வசையிலா வார்த்தையின் பயணத்தில் 

திசையெலாம் மொழிகள் தேரிழுக்கும். 


தரைக்கு வானம் அண்ணாந்து பார்க்கவோ 

திரைக்குள் ஒளிதனை திரட்டிக் கூட்டவோ?

அறிவின் வெளிச்சம் அகத்தினில் படர்ந்து ,

குறைவிலா குணங்கள் குழுமம் படைக்கும் .

மறைவுகள் இல்லா மனதின்  உண்மைகள், 

பிறை நிலவாகிப் பெறுக்கிடும் வெளிச்சம். 

விரிந்ததோர் பார்வை வெளிச்சம் படைத்திட 

எரிந்திடும் பொய்களில் எழுவதே மானுடம்! 

ப சந்திரசேகரன்   

No comments:

Post a Comment