Tuesday, August 7, 2018

கூன்விழாத் திராவிடம்

           


             கூன்விழாத் திராவிடம்.

காஞ்சித் தலைவனின் கருணைத் தம்பியே,

ஊஞ்சல் ஆடுமைய்யா உன்தமிழில் ஊரெல்லாம் !
மேலும் கீழுமாய், மலையும் மடுவுமாய்.
காலத்தின் எதிரலையில் கால்தெறிக்க நீ நடந்தும், 
நூலறுந்த பட்டமாய் நிலைகுலைந்து போகாது,
நாலும் அறிந்ததனால், ஞாலக் கருவானாய்.
'மிசா 'வெனும் பிசாசினை மிரளாது எதிர்கொண்டு 
அசையாத உறுதியுடன் ஆதிக்கவெறி சாய்த்தாய் !

புரியாத புதுத்தமிழ்,புறமொழிபோல் பரவிடினும் ,      
மரியாதை மணம்கமழும் உன்தமிழே,உன்னழகு.
சுவையுறு சொற்களால்,உன்போல் தமிழ்மாலை,
அவையின் மாண்பிற்கு, அணிவிக்க யாரிங்கே ?
மூடரின் வசைச்சொற்கள் முழுமூச்சாய் முட்டிட,
மேடையில் மேல்மூச்சு,நீ என்றும் விட்டதில்லை .
தீராத் திரவியமாய்த் தெளிந்த உன்பேச்சில்,
'பராசக்தி' புகுத்தினாள் பிரித்தாயும் பகுத்தறிவு .

பாமரனுள் பகுத்தறிவை,பதமாய்ப்  பதியமிட்டாய் . சாமியைத்  துறந்தாயோ,சாத்திரம்  திரித்தெழுந்த  
தீமைகள் துறந்தாயோ,தீதெனத் தள்ளிவைத்து !
ஊமையாய் உன் நாவில் உயர்தமிழ்  நின்றபோதும், 
சேமித்த காட்சிகளே ,செவிகளில் நிறைந்திருக்கும். 
பூமியில்நீ மறைந்தாலும்,மறையுமோ உன் தமிழ் ?
குனிவோர் பலரிங்கே ,பதவிக்கென பாசாங்கில் !
தனித்திங்கே நிற்குமே,உன்  கூன்விழாத் திராவிடம் .
                                                              ப.சந்திரசேகரன் .      

2 comments: