Tuesday, October 23, 2018

பகடைக்காய்களும் பலியாடுகளும்

     மகாபாரதத்தில் கர்ணன் பலியாடானான். தாய்தந்தை புறக்கணித்த தனிமனிதன் ஒருவனது பூர்வஜென்ம புண்ணியங்களான தரும சிந்தையும், வள்ளல் வினைகளின் அளப்பறியா சிறப்புகளும், இந்திரன் மூலமாகவும்,கண்ணனின் கருத்தாழக் களவாடல் மூலமாகவும்,சிதைக்கப்பட்டன. சூழ்நிலைக் கைதியான கர்ணன் சூழ்ச்சிகளுக்குப் பகடைக்காயானான். 
     நடைமுறை வாழ்க்கையில் குடும்பத்திலும், சமூகத்திலும்,அரசியலிலும்,யாரேனும் ஒருவரோ அல்லது பலரோ,அன்றாடம் பலியாகின்றனர்.இங்கே பக்திக்கும் மூடநம்பிக்கைகளுக்கும்,எத்தனை பேர் பலியாகின்றனர். இராவணனின் கொடும்பாவி எரிக்கப்போய் இரயில் சக்கரங்களில் பலியாடுகளா னோர் எண்ணிக்கை அதிகமாக,அமிர்தசரஸ் நகரமே அவலத்தில் வீழ்ந்தது.இறைவன் பேரைச் சொல்லி விழாக்காலங்களில் திரளாக ஒன்றுகூடி,கூட்ட நெரிசலில் நசுங்கி மடிதல்,நம்மை நாமே பலியாடு களாக மாற்றிக்கொள்வதல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்?இதுவும் ஒருவகையில் எண்ணற் றோரின் மடமை மேலோங்கிய தற்கொலையே. 
    பாலின வன்கொடுமைகளுக்கு பலியாகும் பெண்டிரையும்,அவர்தம் வேதனைகளையும்   நினைக்கையில்,நேர்மையான உள்ளம் கொண்டோ ரின் மனம் இயல்பாகவே பதைக்கக் கூடும்.சில நேரங்களில் வஞ்சகப் பெண்மையின் அவதூறு வலைகளில் ஆண்கள் சிக்கியிருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும்,பலியாடுகள் இருபாலார் பக்கங்களிலும் இருப்பரோ என்று எண்ணத்தூண்டுகிறது.மனக் குமுறல்களை,உற்ற நட்புடன் பகிர்ந்துகொள்ள இயலாது,தற்கொலைக்கு பலியாவோர் எண்ணிக்கைகளும் கூடிக்கொண்டே வருகின்றன.  
    மற்றவரை முன்னிறுத்தி ஆதாயம் தேடும் மனித குலத்தில்,என்றைக்குமே பலியாடுகளுக்குப்  பஞ்சமில்லை.குடும்பங்களில் மென்மையான மனம் கொண்டோரே மகுடம் சூடிய பலியாடுகள்.சமூக, அரசியல் இயக்கங்களில்,தலைவர்கள் பலியான காலம் மலையேறிவிட்டதால்,இன்றைக்கு தொண்டர் களே பகடைக்காய்கள்.இவர்களே தலைவனுக்காக என்றைக்கும் தடியெடுக்கவும்,சிறைசெல்லவும், தீக்குளிக்கவும்,திமிறிநிற்கும் பலியாடுகள்.  
    அரசியலுக்கு தேவைப்பட்டால்,ஒரு இனமோ வர்க்கமோ அல்லது சிறுபான்மைச் சமூகமோ பலியாகக்கூடும்.இப்படித்தான் ஹிட்லர்  தன்  சொந்த அரசியல் லாபங்களுக்காக,யூத இனத்தையே கொடூர மாய்ப் பலிகொடுத்தான்.இந்த வரலாறே வெட்கப்
படும் இழிசெயலுக்காக,இன்றைக்கும் ஜெர்மன் மக்கள் தலைதாழ்ந்து நிற்கின்றனர்.பலநேரங்களில் நாம் காண்பது,அரசு மேலாண்மையும் இறையாண் மையும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட அரசியலே!இந்த அதர்ம அரசியலில்,குறிப்பிட்ட இனம் சார்ந் தோரும் மதம் சார்ந்தோரும்,அவ்வப்போது பலியாடு களாவதை நாம் காண்கையில்,அவற்றைப் பற்றிக் கேட்கையில்,நாகரீகத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை நிலைகுலையைச் செய்கிறது.   
    நம் பெருமைமிகு பாரத மண்ணில் குருதிப் 
புனலுக்கும்,கூட்டுக்கொலைகளுக்கும்,பஞ்சமில்லை. விடுதலைப் போராட்டக் காலங்களில்  நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைப் புத்தகத்தின் குற்றமிகுப் பக்கங்களாக் கொள்ளலாம்.ஆனால் 1984 இல், இந்திராகாந்தி அம்மையார் ஓரிரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்காக,நாடு முழுவதும் சீக்கிய உயிர்கள் வேட்டையாடப்பட்டதும்,அதனைத் தடுப்பதற்கான அரசு நடவடிக்கைகள் காலம் தாழ்ந்தே மேற்கொள்ளப் பட்டதும்,பலியாடுகளின் பரிதாப மரணங்களின் வடுக்களாகும். 
     இதே நிலைதான் பின்னர் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியச் சகோதரர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப் பட்டதிலும் உணரப்பட்டது.எப்படிப் பார்த்தாலும் இதுபோன்ற படுகொலை நிகழ்வு களுக்குப்பின்னே,அரசுகளைக்காட்டிலும்,அரசியல் சூழ்ச்சிகளே ஆரம்பப்புள்ளிகளாகி,ஆட்டக்களமாகி, அநியாயங்களை அரங்கேற்று கின்றன.
    எனவே காக்கும் அரசுகளைக்காட்டிலும்,கருணை யின்றி அரசியல் லாபங்களுக்காக காலப்பிழை யாற்றும் களவாணிகளே,கரும்புள்ளிகளாகின்றனர். 'இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே 'எனும் பழைய தமிழ் திரைப்படப் பாடலுக்கேற்ப, குடும்பத்திலும்,சமூகத்திலும் அரசியல் ஆட்டங்களி லும், மடமையிலும்,சூழ்ச்சியிலும் சிக்கி பலியாகும் ஆடுகள்,மனித இனத்தின் களங்கப் புள்ளிகளாம். இந்த சிந்தனைச் சிதரல்களுக்கு வித்திட்ட,மதிப்பிற் குரிய உச்ச நீதிமன்ற,முன்னாள்  நீதிபதி,  திரு.மார்க்கண்டே கட்சுவுக்கு  நன்றியுடன், {Courtesy 'Fanning the Flames,'by Mr..Markandey Kadju,Single File Columns of the Hindu,dated 23rd October 2018}
ப.சந்திரசேகரன் . 

1 comment: