Friday, October 12, 2018

துறவி

மனதின் சுமை மனதளவே ஆகுமாம்!
பழகிப்போன பசிக்கு வயிறோடு பிணக்கில்லை;
தொடரும் தொல்லைகளால் துறவியாகும் மனதிற்கு,
இடரெனும் சொல்லின் இலக்குகள் ஏட்டளவே.

ரையற்ற கவிதையென உள்ளுக்குள் உறைந்து, 
தரையில் படுத்தாலும் வானமே எல்லையென்று,
திரையிட்ட  மனதோடு வாழ்வோர் தமக்கு,
ரைகடந்த  காலமும் கணக்கில் இல்லை.

மனிதனின்  பலம் மனிதமே ஆகுமாம்! 

விழித்திடா விழிகளிடம் பொழுதுக்குப் பகையில்லை;
படருமோ பெயருமோ,பயிரறியாப்  பார்வைக்கு, 
அடர்த்தியின் அளவுகோல், அணுவளவும்  அறிவதில்லை. 

முரிவுகண்ட உறவுகள் முகப்பருவின் வடுக்களாய், 
வரிந்துகட்டி வரிசையில் வழக்காடி வலம்வர, 
உரியடியின் வலியினில்,உடைந்துபோன உள்ளமோ,  
விரைந்து வெளியேறுமாம், வலைகளைக் கடந்து.

ப.சந்திரசேகரன் .  



4 comments:

  1. துவக்க வரிகளே அருமை ஐயா... ஒவ்வொரு பத்தியின் துவக்க வாக்கியங்கள் எல்லாம் கண்களை விரிய வைத்தன....துறவியின் புண்களை புரிய வைத்தன...நன்றி அய்யா!!

    ReplyDelete
  2. மனிதனின் பலம் மனிதமே ஆகுமாம்!
    Classic...

    ReplyDelete