Saturday, February 11, 2017

தி. மு. க செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .

அன்புள்ள திரு ஸ்டாலின் அவர்களுக்கு,
அரசியலில் அலுப்புத்தட்டும் அளவிற்கு அடைமொழிகள் தேவையா என்பது மட்டுமே குறித்த ஒரு கடிதம் இது. மக்களை நேரிடையாக மட்டுமே அணுகமுடிந்த காலகட்டத்தில், மொழி அலங்காரமும், அடைமொழிகளும் தேவைப்பட்டன.இப்படித்தான் கடந்த நூற்றாண்டில் தந்தை பெரியார், கர்மவீரர், அறிஞர், கலைஞர், நாவலர், மக்கள் திலகம், நடிகர் திலகம், போன்ற சொற்கள் உலாவந்தன. ஆனால் இன்றைய தொழில் நுட்பத்தில், சமூக வலைத்தளங்களும் மின் அஞ்சலும் பிரபலமாகிவிட்ட தருவாயில், அரசியல் தலைவர்களின் ஏற்கனவே செல்வாக்கு பெற்ற   பெயர்களை  பின்னுக்குத் தள்ளி , அவையில் கூட அடைமொழிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதோ கட்சித்  தலைவரின்  பெயரை  அங்கத்தினர்கள்  பயன்படுத்த மாட்டார்கள் என்பதோ   எந்த வகையில் நடைமுறைக்கு உகந்தவை   என்று விளங்கவில்லை .மெரினா கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்து தமிழக மக்கள் பலரின்  மனசாட்சியின் குரலாக எழுந்த மதிப்பிற்குரிய ஓ பி எஸ் கூட, அடிக்கடி அடைமொழிகளைப் பயன்படுத்துவது தேவையில்லை என்றே தோன்றுகிறது. இன்றய சமூதாயம் பெரிதும் விரும்புவது செயல்களே தவிர அடைமொழிகளோ, அவசியமில்லா சொற்களையோ  அல்ல .சமீபத்தில் தமிழகம் முழுவதிலும் எழுந்த ஜல்லிக்கட்டு இயக்கம், அடைமொழிகளைக் கடந்து ஆக்கம் பெற்றது, 1965 இல் நடைபெற்ற, நானும் கல்லூரி மாணவனாகக் கலந்துகொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்று, செயல்களே பிரதானம் என்பதை உணர்த்தியது .எனவே தி மு க ஆட்சியில் ஒருகாலத்தில் மனிதர்கள் பெயர்தாங்கிய மாவட்டங்களும் போக்குவரத்துக் கழகங்களும் ஊர் பெயர்களையும் போக்குவரத்துத் துறையின் பெயர்களை மட்டுமே    தாங்குமாறு செய்தது போன்று, சமீபத்தில் தாங்கள் பேனர்களைக் குறைக்குமாறு அன்புக்கட்டளை யிட்டதுபோன்று, தங்களுக்கு கம்பீரம் சேர்க்கும் சிறந்த பெயருக்கு முன்னால் அடைமொழிகள் , அலுப்பு தட்டும்  அளவிற்குச் செல்லாதபடி  குறைத்துக் கொள்ளுமாறு, முடிந்தால் அடைமொழிகளையே தவிர்க்குமாறு அறிவுறுத்துவீர்களா? இதுவே முகநூல் மற்றும் ட்விட்டர் மூலமாக விடுக்கப்படும்  என் எளிய வேண்டுகோள்.
அன்புடன்,
ப சந்திரசேகரன்.
ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்.             

No comments:

Post a Comment