Monday, July 12, 2021

உரக்கப் பேசாதே !

உரக்கப் பேசாதே;

உண்மைகள் சிறைகாணும் ;

வலிமையுடன் எழுதாதே; 

வலிப்புறும்  உன் எழுத்து. 

கருத்துக்கள் களமிறங்க, 

களமெல்லாம் கரித்துகள்கள்.   

சரித்திரம் மாறுகையில் 

தெரித்திடும் உரிமைகள்..


பழையகதை  பழித்திடுவோர் 

விழைவதுவும் பழையகதை.

பாத்திகள் கட்டுதல்போல் 

படுகுழிகள் தோண்டுபவர், 

நாற்றினை நடுவதுபோல் 

நடுநெஞ்சைப் பிளந்திடுவர்.

பிடிபடாப் பொய்களினுள் 

புதைந்திடும் பலர்நியாயம். 


எள்ளுக்கு விதைத்தமண்ணில், 

எருக்கஞ்செடி எத்தனை பார்!

அள்ளக்கை அரசியலில், 

ஆற்றுமீன்கள் கரைக்குவர 

தள்ளுவராம்  தனக்கொரு கூர்.

உள்ளிருக்கும் உண்மைக்கூழ் 

அள்ளித் தெளிக்கையிலே, 

அள்ளுவரோ,அழிப்பரோ?


உரக்கப் பேசாதே! 

உரைத்தவழி உயிர்போகும். 

உரைத்ததோர் உண்மைகள். 

நீர்த்ததோர் நெருப்பாகும்.

கரைத்ததோர் சாம்பலுடன் 

கரைத்துவிட்ட உரிமையெல்லாம், 

காரியமாய்க்  கரைந்தபின்னே, 

ஊறிடும்பொய்,உண்மையென!  

ப.சந்திரசேகரன்.


2 comments:

  1. உண்மை உண்மைஉண்மையே.மிக சிறந் பதிவு.

    ReplyDelete