Tuesday, March 3, 2020

ஆலயக் கோலங்கள்

  "கோயில் இல்லா ஊரில் குடியிருப்பதோ"?என்பது,தலையாய, தொன்மைக் கேள்விகளில் ஒன்று. மன்னர் ஆட்சிக் காலங்களில் மக்களை நெறிப்படுத்த பல ஊர்களில் ஆலயங்கள் நிறுவப்பட்டன. இவற்றில் புராண காலங்களையும், இதிகாசங்களையும் போற்றும் ஆலயங்கள் நிறைய உண்டு. 
   மனிதன் வாழும் மண்ணின் சுத்தம் அவனுடைய மனதின் சுத்தத்தின்  மறுவடிவே. தனக்காக மண்ணை நேசிப்பவனுக்கும்,மண்ணின் புனிதம் பேணுவதற்காக மண்ணை நேசிப்பவனுக்கும் நிறையவே  வேறுபாடுகள் உண்டு.
  பெரும்பாலும் இதுபோன்ற வேறுபட்ட நிலைப்பாடுகளில் தோற்றுப் போவது,  மண்ணின் புனிதமே.மனிதனின் மிகைப்பட்ட சுயநலம்  மண்ணின்புனிதத்தை, புதைமணல் ஆக்குகிறது.
   தன்னை மறந்து,மண்ணை நேசித்த மக்கள் வாழ்ந்த காலங்களில், ஆலயங்கள்,மண்ணின் புனிதத்தை,மனிதனின் மாட்சியை,தன்னுள் ஈர்த்து திருத்தலங்களாயின. அங்கே வழிபாட்டு முறைகளும் அன்றாட ஆலய பிரார்த்தனைகளும்,இறைவனை மட்டுமே முன்னிறுத்தி நடத்தப்பட்டன. 
    புனிதர்கள் கால்பதித்த, நல்லோர்கள் பலர்கூடி நன்மைகள் மட்டுமே மனதில் வேண்டி பிரார்த்தித்த ஆலயங்களில், இறைமை பன்மடங்கு பிரகாசித்தது. அப்படிப்பட்ட ஆலயங்களின் கோபுர தரிசனத்தில், மனிதத்தின் மேன்மையை இறைவனின் ஒளியோடு இணைத்து, இன்றும் பலரால் உணரமுடிகிறது.
   ஆனால் காலப்போக்கில்,ஊருக்கொரு கோயில் என்பது தெருவுக் கொரு கோயிலென,மக்களின் இனப்பெருக்கத்திற்கு ஈடுகொடுக் கும்வண்ணம் அதிகரித்தது.எண்ணிக்கை அதிகமாக, ஆலயங்களின் வழிபாட்டு முறைகள் தடம் புரண்டன.தெருவழிக் கோயில்கள் தினந் தோறும் பூட்டிக்கிடக்க,திருவிழாக் காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு, சம்பிரதாயமாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.அன்றாடம் தீபம் ஏற்றுவதும்,ஆலயத்தூய்மை பராமரிப்பதுமின்றி பூட்டிக்கிடக்கும் ஆலயங்களைக் காண்கையில்,ஏதோ அவரவர் பெருமையை நிலை நாட்டுவதற்காக தெருவழி ஆலயங்கள் நிறுவப்படுகிறதோ,எனும் ஐயற்பாடு எழுகிறது. 
    வியாபாரப் போட்டியில் ஈடுபடும் சிறுவணிக வளாகங்கள் போலவோ, அல்லது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போலவோ,மதச்சாலைக ளில் வழிபாட்டு தலங்கள் அமைத்து,வணிகச் சந்தையின் போட்டியில் பலர் தோற்றுப் போவதுபோல்,ஆலயங்கள் பல இறைமைக்கே தோல் வியை ஏற்படுத்துகின்றன.
    இதில் ஆன்மிகம் மறந்து ஆலயம் அமைப்பவர்கள்,தொலை தொடர்பு நிறுவனங்கள் 2 G, 3G, 4G என வாடிக்கையாளர்களை வேட்டையாடுவது போல,பக்தர்களின் பணப்பையை குறிவைக்கின்றன. 
   எங்கே இறைவனை முன்னிறுத்தி வணிகம் நடத்தப்படுகிறதோ, அங்கே இறைமை இளைத்து, கண்ணுக்குத் தெரியாத கடவுள் முற்றிலும் காணாமல் போகிறார்.பக்தி மார்க்கத்தில்,பரவசமே,இறையுணர்தல். அங்கே பணம் ஊடுருவ,பரவசம் பகல்வேடமாகிறது. குற்றங்களின் கும்மாளத்தில் புலன்களை பொய்ப்பித்து தெய்வச் சிலைகள் கடல் வணிகத்தின் கருப்பொருளாகின்றன
   "ஆலைகள் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்"என்று பாடினான் மகாகவி பாரதி.ஆனால் இன்றோ"ஆலயம் செய்வோம் அதில் ஆளுமை செய்வோம்"எனும் ஆன்மீக மேலாண்மை,கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளைக் கடந்து மக்களை ஆட்கொண்டு வருகிறது.
    பிரார்த்தனை ஒரு படகு;அதன்மூலம் கரையேறத் துடிப்போர் இங்கே ஏராளம்! அப்படகிற்கு,பரிகாரத்தை துடுப்பாக்கி, துடுப்புகளை வகை வகையாய்ச் செய்துதர,ஆன்மீக வணிக வரிசையில்,ஆருடம் கூறுவோரும், ஆருடப் பலன்களை நிறைவேற்ற ஆயிரக் கணக்கில் இடைத்தரகர்ளும் ஈசலென படையெடுத்து,நம்மை வரவேற்கின்றனர்.
    மலர்மாலைகளும்,அர்ச்சனைத்,தட்டுகளும் ஆலாபனைப் பொருட் களும் ஆலயம் சுற்றி நிறைந்திருக்க,அங்கே தங்களுக்கென தனியிடம் பிடிக்கப் போராடி  அட்டைபோல் ஓட்டவரும் பிச்சைக்காரர்களும் நம்மைச் சுற்றிவர,ஆலயம் காண்பதோ ஆண்டவனைத் தொழுவதோ என்ற அங்கலாய்ப்பில்,பல்வேறு கூட்ட நெரிசலின் புள்ளிகள்,
ஆலயக் கோலத்தினை ஆரவாரக் கோலமாக்குகின்றன. 
   பிரசித்திபெற்ற பல ஆலயங்களில்,இக்காட்சிகளை நாம் அன்றாடம் காணமுடியும்.பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் ஆலயக் கோலங்கள் மேலும் களைகட்டும். சமீபகாலங்களில் சாய் ஆலயங்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் பலம் பெற்று வருகின்றன.  
    இக்கட்டுரையின் நோக்கம்,சத்தியமாக பக்தியையும் வழிபாட்டு முறைகளையும் விமர்சனம் செய்வது அல்ல.அவ்வாறு விமர்சனம் செய்ய நான் நாத்திகனோ அல்லது இறை நம்பிக்கை அற்றவனோ அல்ல. ஒருபுறம் சமூகவியல் சார்ந்து யோசிக்கையில் இந்தியா போன்ற மக்கள் பெருக்கம் நிறைந்த மண்ணில்,அன்றாடம் கூட்டம் கூடும் ஆலயங்கள், பலருக்கும் சுயதொழில் செய்யும் வாய்ப்பினை விரிவடையச் செய்கின் றன.ஆனால்."அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழி பாடில்லை"என்று கவியரசு கண்ணதாசன் கோடிட்டு காட்டியது போல, விழிகள் அலைபாயும் ஆலயக் கோலம்,ஆண்டவனைக் கொச்சைப்  படுத்தும் அலங்கோலமே!
   ஆலயக் கோலம் என்பது ஜீவாத்மா எனும் புள்ளியை பரமாத்மா எனும் புள்ளியுடன்நேர்கோட்டிலோ, வளைந்தோ, நெளிந்தோமுடிவில் சேர்த்தாக வேண்டும்.நெடுஞ்சாலையில் செல்வோரும், அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கான மாற்றுப்பாதையை எடுத்தால்தானே,சேர வேண்டிய இடத்தை சென்றடைய முடியும்.பட்டினத்தாரும் அருணகிரி நாதரும் வளைவு நெளிவுப் புள்ளிகளின் சில முன்னுதாரணங்கள்.
    மேலும்"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்;அவனை புரிந்துகொண்டால் அவன் தான் இறைவன்"என்ற கவியரசின் வரிகளை வளர்பிறை திரைப் படத்தின் பாடலாக டி எம் சவுந்தராஜனின் கம்பீரக்குரலில் கேட்கையில்  'இறைவனை வளைந்து வளைந்து செல்லும் பூஜ்ஜியத்தில் எங்கே காண்பதோ? பூஜ்ஜியத்தின் தொடக்கப்புள்ளியும் முற்றுப்புள்ளியும் ஒன்றாவது,ஜீவாதாமாவும் பரமாத்மாவும் ஒன்றாகும் புள்ளியினைக் குறிக்குமோ?' போன்ற  விந்தையான வினாக்கள் நமது நெஞ்சங்களில் எழாமலில்லை .
     முடிவாக,மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உணரப்படும்  பயணப்பாதை எந்த அளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமே, பயண வாகனமும்,வாகன ஓட்டமும்.எனவே,ஆலயம் சிறிதோ பெரிதோ, பிரார்த்தனை எனும் பயண வாகனம்,முறையான அன்றாட வழிபாடு, அவ்வழிபாட்டின் உன்னதத் தன்மை, எனும் வாகன ஓட்டத்தில் சென்றால் மட்டுமே, ஆலயக் கோலம் என்பது,மனித மாற்றுப் புள்ளிகளை, இறைவன் எனும் மாறாப் புள்ளியுடன் இணைக்கும். அப்பொழுதே, ஆலயக் கோலங்கள் ஆன்மாவின் கோலங்களாகும். 

ப.சந்திரசேகரன் 

1 comment:

  1. மனிதன் மாற்று புள்ளி. இறவன் மாறா புள்ளி. இணைக்கும் ஆடு களம்...ஆலயம்....சூப்பர் Sr

    ReplyDelete