Saturday, July 13, 2019

மூச்சென்னும் மூலவர்

பார்வைகள் பலகோடி
போர்வைகள் போல;
போர்வையென பார்வைகள்
உள்ளிருக்கும் உருப்பொருளை
தரிசனம் செய்யுமுன்னே,
திரையிட்டு மறைத்திடுமாம் 
கண்கட்டி வித்தையாய்.
மூச்சிருக்கும் காலம்வரை
பார்வைகள் பேசும்;
பேச்சு சிலநேரம் 
பேதலித்து நின்றாலும் 
போர்வைக்குள் உடலென
பார்வைக்குள் மூச்சு
படையெடுத்துத்  தாக்கும்.
மூளையெனும் பக்தனை
மூலவராய்க் காக்கும்.
பார்வையும் போர்வையும்
பதுக்கிடும் உண்மைகள்,
பலநூறு பொருள்கூறும்
படிப்பினை பாசறையாம்!
மூச்சென்னும் மூலவரும்,
பேச்சென்னும் உற்சவரும்,
சாட்சிசொல்ல வருவதில்லை,
காட்சியெனும் கானல்நீர்
ஆட்சிபெறும் அரங்கினிலே!
மூச்சுக்கு மூச்சிங்கே,
மூலவரைத் தொழுதாலும்,
உச்சிமுதல் பாதம்வரை
உற்சவரே உலகளப்பர். 
உற்சவரின் ஊர்வலம்
ஊரளந்து முடிந்தபின்னே,
பார்வையும் போர்வையும்
பனித்திரையை விலக்கிட
மூச்சென்னும் மூலவரே,
மனிதனும் தெய்வமுமாம்;
அத்வைதம் எனும்சொல்லில், 
அனைவரும் ஒரேமூச்சாம்! 
                    ப.சந்திரசேகரன். 

1 comment:

  1. Respected Sr.,
    All of have different talents. But talent alone without effort amount to nothing. U are really BLESSED by HIM. Bless me too Sr.
    n.balasubramonia pillai 05/107

    ReplyDelete