Sunday, July 28, 2019

பாதைகள்

பாதைகளிங்கே
பார்வையின் தோற்றம்;
போதையின் பார்வையில்
பூமியே சுற்றும்.
சாதியின் பாதையில்
சகதிள் நிறைந்து,
கவுரவக் கற்கள்
சுவரெனத் தடுத்திட,
அவரவர் ஆயுதம்
அன்பினை மாய்க்கும்.
பூவினில் முட்களாய்
பாதைகள் மறித்திட,
பாதிவழிச் செல்
பயணங்கள் முட்டும்.
மதகுகள் தகர்த்திடும்
மதவெள்ளப் பெருக்கில்,
மதியினைத் தள்ளி,  
மரபுகள் மூழ்கும்.
தவறுகள் தடித்தே
தன்வழி நடந்திடின்,
நீதியின் பாதையில்
வழக்குகள் குவிந்திட,
புறவழி அமைத்து
குற்றங்கள் கடக்கும்.
கவர்ச்சியின் பாதைகள்
கால்வழிப் போக்கே!
புரவலர்ப் பாதையில்
புற்றுகள் நிறைந்திட,
மறுவழிப் பாதைகள் 
தருமம் கவிழ்ந்து, 
தோற்றுப் போவதன் 
தோரண வாயிலாம்! 
பரிகளாய்ப் பாரினில் 
விரைந்திடும் மனிதரின் 
பரவசப் பயணங்கள், 
பொய்க்கால் குதிரையில் 
போர்ப்படை அமைத்தலும், 
பாறையைப் பாதையாய் 
பார்த்தலும் போலொரு, 
வரையறை இல்லா 
வழித்தடம் குத்லாம்
வீதிகள் எல்லாம் 
பாதைகள் அல்ல 
ஆதியும் அந்தமும் 
ஒன்றெனக் காட்டும் 
பாதையின் பலமே 
போதனைப் பாதையாம். 
                   ப.சந்திரசேகரன். 

No comments:

Post a Comment