Thursday, February 14, 2019

ஊடலின் பிடியில்


1}"உன்னைப் பிடித்திருக்கிறது"
2}"பைத்தியம் எனும்பேய் 
உன்னைப்பிடித்திருக்கிறது"
3}"ஆம் உன்மேல் எனக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது"
4}"சொந்தக்காலில் நிற்காதவனுக்கு
பந்தக்கால்தான் குறைச்சல்" 
5}"சொந்தங்களும் பந்தங்களும் 
பந்தக்கால் தூண்களாய் 
எனைச்சுற்றி இருக்க 
எந்தக்காலும் பந்தக்காலே"  
6}"'பிடியேன்' எனச்சொல்ல
பணம் இல்லாதவனுக்கு
'அடியே' எனஅழைக்க
வருவாளோ மனைவி!"
7}"அடியேன் இருக்கிறேன் 
உனைக்காக்கும் ஆண்மையென; 
படியேறிக் குடியேற 
வருவாயோ பெண்ணே?" 
8}"இடியே விழுந்தாலும் 
என் இடத்தைவிட்டு 
படிதாண்டி வருவேனா, 
பாழும் உன்னை நம்பி!" 
9}"முடிசூடிய மன்னரெல்லாம் 
மூழ்கியது பெண்ணாலே! 
படியாத உனைச்சுற்றி 
பொழுதைக் களைவேனோ? 
பிடிவாதம் வேண்டாமே 
பொல்லாதது ஆண்சாபம்"
10}"நடுசாமக் கோழியென 
நாள்முழுக்க கூவிடினும், 
விடிந்திடும் பொழுதுனக்கு 
நான்வந்தால் மட்டுமே'' 
ப.சந்திரசேகரன் .    

No comments:

Post a Comment