Monday, February 11, 2019

குரலும் அதிர்வும்

      மனித இயக்கத்தில் தலையாயது குரலாகும். விழிகளின் விசாலப் பார்வையில்,அப்பார்வையின் ஆழத்தில், விழிப்புலனின் வீச்சினை மறுப்பதற் கில்லை.இருப்பினும், குரலும் செவியும் இரண்டறக் கலந்த இரு புலன்களின் பூதாகரப் புவியீர்ப்பில், அகிலமே அதிர்ந்து,அதிசிய நிகழ்வுகள் அரங்கேறு கின்றன. 
   பேச்சிலும் இசையிலும் படர்ந்து பரவசமேற்படுத் தும் குரலின் குடியிருப்பு,செவிகளில் 'பத்திர'மின்றி பதி வாகிறது.வேளாண் குரல் வரப்பைத் தாண்டாது; ஏழையின் குரல் சபை யேறாது என்பர்.புரட்சிக் குரலும் போராட்டக் குரலும்,சில நேரங்களில் வெற்றி பெற்று,சிலநேரங்களில் தோற்றுப்போய்,மைல் கற்க ளாகவும் சுமைதாங்கிக் கற்களாகவும் நிற்பது,  வரலாற்றுப் பாதையின் அடையாளங்களே! 
  எத்தனை தடைக் கற்கள் எதிர்பட்டாலும் நியாக்குரல் என்றேனும் ஒரு நாள் நீதித்தாயின் செவிகளைப் பற்றும் என்பதே,வாழ்வின் நம்பிக்கை.மேலும்,'அவன் இன்றி அணுவும் அசையாது'என்பது போல,குரல்  ன்றி நிலைக்காது எனக்கூறும் தொழில்கள் பல இங்குண்டு.
    அர்ச்சகர்,ஆசிரியர்,அரசியல்வாதி,அரிதாரம் பூசு வோர்,இசைமேதைகள்,மற்றும் நீதிமன்றங்களின் ஆணிவேராக இருக்கும் வழக்கறிஞர் போன்றோர், குரலை உயர்த்தியே குணம் படைப்பர்.குரலை உயர்த் துதல் என்பது,அதிகாரத்தின் அடையாளமாக இல்லை.மாறாக,சொற்களை பிழையின்றி தெளி வாக உச்சரித்து அணு அணுவாக மொழியை அனுப வித்து,அதிர்வுகளை ஏற்படுத்தி,நாவினை இதிகாச மேடையாக்கி கேட்போரை கிரங்கச் செய்வதாகும். 
     குரலின் கம்பீரம் கருவின் கதிர்வீச்சே. பேரறிஞர் அண்ணாவைப்போல்,கலைஞரைப்போல்,வெள்ளித் திரையின் வீர சிவாஜிபோல்,ங்காங்கே ஒவ் வொரு மொழியிலும் ஒரு சிலர் இருக்கக்கூடும். ஆசிரியர் தொழிலில், குரலின் கம்பீரம்,வெகுவாக மாணவரை ஆட் கொண்டு,வகுப்பறையை மெய் மறக்கச் செய்யும்.அருவி கொட்டி ஆற்றொழுக்காய் ஓடுதல் போல்,சொல்லாண்மை பெருக்கெடுக்க, வகுப்பறையில் பேச்சு மழையில்,பேரின்பப் பெரு விழாக்கள் பெருமிதம் கொள்ளக்கூடும். 
    என்னதான் சிந்தனைத் தெளிவு ஒருவருக்கு இருந் தாலும்,உரத்த குரலே உள்ளத்தில் உள்ளூறும் கருத் துக்களை உயரத்தில் ஏற்றுமாம். அரசியல் கத்தில், இன்றுதான் நாம் பிரியாணிக்கும் சில்லரைக்கும்  கூட்டங்கள் திரட்டப் படுவதைப்பார்க் கிறோம். ஆனால் கடந்த நூற்றாண்டில்,அரசியலுக்கென,  அரசியல்வாதிகளின் பேச்சுக்கென,கூட்டம் தானாகக் கூடியதே தவிர கூட்டப் படவில்லை.சிந்தனையைச்  சிதறவிடாது மொழியை மூச்சென சுவாசித்த கூட்ட மொன்று அன்றைக்கு இருந்தது.அக்கூட்டத்தின் மூச்சுக்காற்றென பேச்சிருந்தது.
   அன்று பேச்சில் முத்திரை பதிக்,மொழியாண்ட தலைவர் பலர் இருந்தனர்.கருத்தும்,மொழியும், பேச்சும் முப்பெரும் விழாக்கண்டன.குரலின் அதிர்வுகள் குதிர்நிறை நெல்லென கேட்போரின் நெஞ்ச மெலாம் நிறைந்து நின்றன.எனவே அரசிய லுக்கு குரலே அச்சாணி எனக் கூலாம்.  
     அதேபோன்று வெண்திரைக்கடலில்,கப்பலுக்கு,   நடிப்பெனும் குரலே நங்கூர மாகும்.பி.கண்ணாம்பா,   கே.பி.சுந்தராம்பாள்,சிவாஜி கணேசன் போன்றோர்,   குரலால் நடிப்பின் கோபுரமானது,குரலின் அதிர்வு களால் மட்டுமே.இவர்களின் குரலின் அதிர்வும், அழுத்தமும்,ஆழமும்,தெளிவும்,நெளிவு சுளிவு
களும்,தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் தங்கமுலாம் பூசி,அருமையான வசனங்களினால் என்றென்றும் நிலைத்து நின்று நடிப்புக் கோபுரத் தில் நளினக் கலசங்களாயின. 
     இன்றைக்கு சூப்பர் ஸ்டாரின் குரலில் ஒரு காந்த மான அதிர்வு இருப்பது உண்மைதான்.ஆனால் அவரது விந்தைக்குரிய வசன உச்சரிப்புகளில் மண் வாசனை குறைவால்,குரலில் அதிர்வுகள் முரண்பாடு காணுகின்றன. இதே போன்றதே, மம்மூட்டியின் குரல் அதிர்வும் பெருமைக்குரிய பாடகர் கே.ஜே.யேசு தாஸின் பாடல்களின் பிரம்மாண்டத் தன்மையும்.  இவர்களின் குரல் அதிர்வுகளில் மண்வாசனை மாறிப்போவதை யாரும் மறுப்பதற்கில்லை. 
     நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களின் குரல் அதிர் வுகள் வழக்குகளின் வெற்றி தோல்விகளுக்கு மட்டுமே மூலகாரணமாகின்றன.அறிவின் ஆக்கிர மிப்பில்,குரல் அதிர்வுகள்,வழக்கின் திசையை மாற்றுவதில் மும்மரமாக இருக்கவேண்டும் என்ப தால்,ஒவ்வொரு வழக்கறிஞரின் குரலும் வாய்மை யையும் பொய்மையையும்,புரட்டிப் போடுகின்றன.
    இவற்றுக்கெல்லாம் மேலானதே,அர்ச்சகரின் குரல் அதிர்வுகள்.இவ்வதிர்வுகள்,ஆலயங்களின் அரிச் சுவடியாக,ஆத்மாவின் ஆள்காட்டி விரலாக,உயர்ந் தெழவேண்டும்.அர்ச்சகரின் குரல் உள்ளார்ந்து உயர வேண்டுமேயல்லாது, புறம் சாய்ந்து,பொருள் சார்ந்து, உயரக்கூடாது. சமீபத்தில் ஒரு ஆலயத்தில்,அர்ச்சக ரை கற்பூரம் காண்பிக்க வேண்டுகோள் விடுத்த போது,யாருடனோ அலை பேசியில் பேசிக் கொண் டிருந்த அவர்,"நீங்கள் அர்ச்சனைத் தட்டிலிடும் பத்து ரூபாய்க்காக வரவிருக்கும் ஐந்நூறு ஆயிரத்தை விடமுடியாது" என்று கூறியது, அர்ச்சனைக் குரலின் ஆன்ம கம்பீரத்தை, கேள்விக்குறி யாக்கியது .
    ஆனால் வேறு ஒரு ஆலயத்தில் அர்ச்சகர்  பரவச மூட்டும் அதிர்வுடன் குரல் எழுப்பி,வேதமழை பொழிந் தபோது, ஆர்ப்பரித்துப் போய் உளமார அவரைப் பாராட்டினேன்.அதற்கு அவரோ,"இறைவனுக்கும் எனக்கு மிடையே இந்த மெய்மறக் கும் வேத அதிர்வு களே வலுவான வழிபாட்டு நெறி; இறைவனை எனக்கு அடையாளம் காட்டும் வழித் தடம்,இதை முழு மனதோடு செய்யாவிடில் எனக்கு இங்கென்ன வேலை"என்று சொன்னபோது மெய்சிலிர்த்துப் போனேன்.{செங்கற்பட்டிற்கும் வேடந்தாங்கலுக்கும் இடையே அமைந்துள்ள தென் திருப்பதி என்றழைக் கப்படும் திருமலைவையாவூர் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ள,ஸ்ரீ பிரசன்ன வெங்கேடச பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக ள்ள,ஒரு பிரிசித்தி பெற்ற அனுமன் சந்நிதியின் குருக்கள் திரு.வெங்கேடச  பாலாஜி அவர்களே,தன் உரத்தக்குரலால் வேத அதிர்வுகள் படைத்த  அந்த அர்ச்சகராகும்}       
     'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற வழக்கு மொழியைக் கடந்து,குரல் அதிர்வுகளால்,குணத்தால் செய்யும் தொழிலை சிரசின் மேலேற்றி,செயலால்  மனிதத்திற்கு மெருகேற்றி,பிவிப் பெருங்கடலின் கலங்கரை விளக்கெமெனத் திகழ்வோர்,நம்மில் என்றும் வித்தியாசமானவர்களே !

No comments:

Post a Comment