Wednesday, February 22, 2023

ஆற்றலும் ஆற்றாமையும்.

 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

  வள்ளுவனின் இக்குறள்படி,பணிவும், பகைவரை வென்றெடுக்கும் திறமையுமே, ஆற்றலாகும்.ஆற்றல் ஒருவரின் பேச்சால், செயலால் அறியப்பட்டு,அப்பேச்சிற்கும் செயலுக்கும் ஒருவர் எடுத்துக்காட்டாக விளங்கும் பட்சத்தில்,அவரின் ஆற்றல் அங்கீகரிக்கப்படுவதே இயல்பு என்றாலும்,  எல்லோரும் அவ்வாறு  அங்கீகரிக்கப் படுவதில்லை.

 உதாரணதிற்கு,எம் ஜி ஆருக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்டபோது,பலர் மகிழ் வுற்றாலும், சிவாஜிக்கு அப்படி ஓர் அங்கீகாரம் கிட்டவில்லையே என்ற ஆதங்கம்,பலருக்கும் உண்டு.மாறாக, எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கிய சின்னப்ப தேவர்,தன்னை வைத்து ஒரு திரைப் படமும் எடுக்க வில்லையே எனும் எந்த ஒரு ஆதங்கமும், சிவாஜிக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்,அவரது நடிப்புத்திறன்,கரை கடந்து அலைவீசி, ஆர்ப்பரித்தது என்பதை, அவரே நன்கு அறிந்திருந்தார். 

  அரசியலில்,எல்லோரும் மக்களால் எல்லா நேரங்களிலும் தேர்ந்தெடுக்கப்படுவ      தில்லை.கலைஞர்,தன் வாழ்நாள் முழுவ தும்,தான் நின்ற சட்ட சபை தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை, அவரோ,அவரது கட்சியோ,ஒருமுறை கூட சட்டசபை தேர்தலில் தோற்றதில்லை. ஆனால்,செல்வி ஜெயலலிதாவின் தலை மையில் அவரது கட்சி,இருமுறை தோற்றுப் போய் ஆட்சி அமைக்கத் தவறியது.

  1967 வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ், அதற்குப்பிறகு,திராவிட கட்சிகளை நம்பியே,தமிழ் நாட்டில் தனது அடை யாளத்தை தொலைக்காமல் இருக்கிறது. காமராசரும்,கக்கனும்,மக்கள் மனதில் நின்றதுபோல்,ஆளும் திறன் மிக்க பக்தவக்சலமும்,பொருளாதார அறிவாற்றல் பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும் மக்களிடம் வெகுவாக பிரபலமாகவில்லை. அறிவும் எழுத்தாற்றலும் நிரம்பப்பெற்று,  மூதறிஞர் என்றழைக்கப்பட்ட  ராஜாஜி, குலக்கல்வி சித்தாந்தத்தால் மக்கள் மனதில் இடம்பெறுவது கடினமாயிற்று. அரசில் இடம்பறவேண்டும் என்று ஒருபோதும் நினைக்காத திராவிடச்செம்மல் தந்தை பெரியார்,சமூக நீதிக் கோட்பாட் டினால்,இன்றும் மக்களால் போற்றப்படு கிறார்.

   பொதுவாக, தமிழ்நாட்டில்,ஏன்,இந்தியா விலும் கூட, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், எண்ணங்களால்,சொல்லாண்மையால், செயல்திறனால்,முதன்மைபெறும் நபர்கள், மக்களின் செல்வாக்கைப்பெற்று தலை வராகின்றனர்.நேருவைப்போல் மக்கள் தன்னை நேசிக்கவில்லயே என்று,படேல் ஒருபோதும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய தில்லை.கட்சிகள் யார்வேண்டுமானாலும் தொடங்கலாம்.அப்படித் தொடங்குபவர்கள், அதற்கு தலைமை ஏற்கலாம்.ஆனால், அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகி  றார்களா என்பதை,காலமே தீர்மானிக்கும்.

   வெற்றிபெற்று வாகை சூடுபவர்கள் மக்களுக்கு நன்றிகூறும் அதே நேரத்தில், தங்களை தேர்ந்தெடுக்காத மக்களை சபிப்பதில்லை.'இம்முறை தோற்றால், மறுமுறை வெல்வோம்'எனும் நம்பிக் கையே,அவர்களின் அரசியல் களத்திற் கான தகுதி.அப்படி இல்லாமல்,தன் திறமையை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள்,அரசியல் தகுதியை மட்டுமல்லாது,திறமை,ஆற்றல், எனும் சொற்களுக்கே,இழுக்காகின்றனர்.

  அரசியலில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம்,அவரின் குணங்களுக்கும், கடமையாற்றும் கண்ணியத்திற்கும், மக்களை கட்டியாளும் ஆற்றலுக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.!திமுக ஆட்சியமைக்கத் தொடங்கிய காலத்திலும், அண்ணாவின் எதிர்பாராத மறைவுக்குப் பின்னரும்,மக்கள் மத்தியில் பிரபலமான, கலைஞர்,நாவலர்,பேராசிரியர்,மக்கள் திலகம் என்று பலர் இருந்தாலும்,படைப் பாற்றல்,நாவன்மை ஆகியவற்றால் கலைஞரும்,திரைத்துறையில் புரட்சி சிந்தனைக்கு மேடை அமைத்து,மக்கள் மனம் வென்ற எம். ஜி. ஆரும்,மக்களால் அதிகமாக அறியப்பட்டனர்.அதன் விளை வாக,அண்ணாவுக்குப் பின்னர் முதல்வரான கலைஞரிடம்,ஈர்ப்பு சக்தியும் நட்புறவும் கொண்ட பேராசிரியர் அன்பழகன்,தன் வாழ்நாள்வரை,தி.மு.க வில் தொடர்ந்து பணியாற்றி,அதற்கான அங்கீகாரத்தை, தேர்தல் மூலம் மக்களிடமும்,கழகத்தின் மூலம் அரசிலும்,தொடர்ந்து பெற்றிருந்தார். கருத்துவேறுபாடு காரணமாக,மாற்றுக் கட்சிக்குச் சென்ற நாவலர்,தனக்குரிய அங்கீகாரத்தை,அங்கே பெற்றார். 

    தேர்தலில் ஒரு நபருக்கான அங்கீகாரம், சூழ்நிலைக்கேற்றவாறு,அவர் சார்ந்திருக் கும் அரசியல் கட்சியோடு சேர்த்து,அந்த நபருக்கான தனிச் செல்வாக்கின் அடிப் படையிலேயே,அவரின் வெற்றி தோல்வி களை நிர்ணயிக்கிறது.சரத்குமார், நெப்போலியன்,ராமராஜன்,எஸ்.வி.சேகர் போன்றோரும்,இன்னும் பலரும் கட்சியின் தலைவர்களாக /நடிகர்களாக  மக்களால் அறியப்பட்டு, பாராளுமன்ற/சட்டசபை தேர்தல்களில் வெற்றி கண்டனர். அதற்கு, அவர்கள் போட்டியிட்ட சமயத்தில்  நிலவிய அரசியல் சூழலும்,அவர்களுக்கு  மக்களிட முள்ள அறிமுகமும்,பெரும்காரணமாக அமைந்தன.திரு. விஜயகாந்தும் தனிக்கட்சி தொடங்கி,கணிசமான விழுக்காடு வாக்கு களைப் பெற்று தன் அரசியல் தகுதியை நிரூபிக்கவில்லையா?

   ஒரு தனி நபரின் அங்கீகாரம்,அவர்க ளுக்கு கிடைக்கப்பெறுகிற வாய்ப்பினை அனுசரித்ததே ஆகும்.பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றமும், திரு.சுகி.சிவம் போன்றோரின் மேடை பேச்சுகளும்,மக்களை ஈர்ப்பது அவர்களின் சிந்தனை மற்றும் சொல்லாற்றலால்தானே. திறமைக்கு வாய்ப்புக்கிட்டும்போது ஆற்றல் கூடுகிறது.ஆனால்,ஆற்றல் கொண்ட அத்தனை பேருக்கும் மேடைகள் அமைவ தில்லை.மேடை கிடைத்தும் மேடையைக் குறை கூறுவோர்,மேடையேறும் தகுதியை இழக்கின்றனர்.

  முடிவாக,மேடையேறுவதற்கு முன்பாக, களம் காண்பதற்கு முன்பாக,மேடையும் களமும்,தனது ஆற்றலை மக்கள்முன் கொண்டுபோகத் தகுதி உடையனவா.  என்று,யோசிக்கவேண்டும்.அவ்வாறு.  யோசிக்காது,மேடையும் களமும் காண முற்படுவது,அரைவேக்காட்டுத் தனமாக  மாறி ஆற்றாமையை வெளிப்படுத்தக் கூடும்.கர்ணனைப்போல்,"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து,வஞ்சத் தில் வீழ்ந்து,"மக்கள் தன்னை வஞ்சித்திட்டு விட்டதாக நினைப்பது,அறநெறிப்பிறழ லாகவோ,அல்லது ஆற்றாமையாகவோ, இருக்குமேயன்றி,அரசியல் புரிதலையோ அனுபவ முதிர்ச்சியையோ வெளிப்படுத்தப் போவதில்லை.!!ஆற்றாமையே,ஆற்றலுக் கென்றும் முதல் எதிரி. 

ப.சந்திரசேகரன்.


                            

1 comment:

  1. சிறப்பு சார்.... ஓட்டுக்கு துட்டு... துட்டுக்கு ஓட்டு என மக்கள் பழகி விட்டதன் பலன்... இன்று ஒரு கவுன்சிலரை கூட தவறேன்றால் தட்டி கேட்க முடியாத நிலை.

    ReplyDelete