Sunday, November 17, 2019

பஞ்சமி நிலம் !

பஞ்சமி நிலமென்ன,பஞ்சம்கோடி பார்த்ததுவோ?
அஞ்சியஞ்சி வாழ்ந்தவர்க்கு,ஆங்கிலேயர் தந்ததுவோ?
வஞ்சகரின் வாஸ்துவுக்கு வாயிலெனச் சென்றதுவோ?
மிஞ்சியதால் கெஞ்சியதோ,கெஞ்சியதால் மிஞ்சியதோ ?

அஞ்சுக்கு முன்னாலே நாற்திசையும் வர்ணங்களோ?
நஞ்சுத்துளி பாலில்விழ,பாலெல்லாம் பாழாமோ!
பஞ்சைச்சுற்றி தீயிருக்க,பார்க்கும்தரி பரிதவிக்க,
நெஞ்செலும்பு வேகாது,வெந்தசிதை வாடுமன்றோ!.

மஞ்சத்தில் கிடந்தாலும்,மாந்தோப்பில் படுத்தாலும்,
நெஞ்சாரத் தாங்குவதே,நிலத்தாயின் மரபாகும்.
கஞ்சிக்குக் கலசமெனின்,காசிக்கு வேறுண்டோ?
வஞ்சிக்கும் நிறத்திற்கும்,வாய்க்கரிசி நிலம்தானே!

செஞ்சுவச்ச ஏணியிலே செறுக்குடனே ஏறிநின்று,
மிஞ்சியவர் யாருமுண்டோ,மேனியிங்கே சரியாது?
செஞ்சோற்றுக் கடனாக நிலத்தாய்க்கு நாம்தீர்த்தல்,
பஞ்சவர்ணம்  ஒன்றாக்கும்,பஞ்சமிலா பயன்பாடே !
ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment