Saturday, June 8, 2019

கணக்கு

விழித்தெழும் பொழுதுகள்,  
வழித்தடக் கனவுகளை 
வேட்டை யாடியதின்
தடயம் தெரிகிறது.

வீட்டையும் வீதியையும் 
கூட்டிப் பெருக்கியதில், 
ஏட்டிக்குப் போட்டியாய் 
கணக்குகள் எகிறுகிறது.

கனமான பொழுதுகளை 
கழித்துப் பார்க்கையில்,
ஆயுட்காலத்தின் அரைப்பகுதி
காணாமல் போகிறது. 

குழித்திட்ட விதைகள் 
புதைத்திட்ட  பிணமாகிட,
கழித்தலோ கூட்டலோ 
காலத்தின் கணக்கு?. 

முழுநிலவு மகிழ்ச்சி 
முகம்மாறித் தேய்ந்திட, 
அழுமிருளாய்ப் பெருகிடும் 
ஆழ்கிணற்றுச் சோகம்.

வரிசையாய்ப் பெருகிடும் 
ஆண்டின் கணக்கினில்,
சிரிப்பின் ஓசையை 
சரித்திடும் ஓலம் .


நெரிசலாய்க் கூடிடும் 
நிகழ்வுகளின் கணக்கில், 
அரியதோர் அடையாளம் 
அட்டையாய் நிற்குமோ?
  
தனக்கென முத்திரை
பதித்திடா வாழ்வில், 
பரிதாபம் கூடுமோ, 
பரவசம் கழியுமோ? 

கோழையின் நெஞ்சினில் 
உழன்றிடும் ஊனத்தின் 
நிழல்யுத்தக் கணக்குகள், 
நிஜமோ பொய்யோ? 

'பதிவு'கள் பெருக்கி 
பாதையை 'வகு'க்கையில், 
நால்வகைக் கணக்கும் 
நாழிகை கணக்கோ? 

போலிக் கணக்குகளே 
புலன்நிறை பாதையினை 
பூதமெனச் சூழ்ந்திடும், 
போதைக் கணக்குகளாம்! 

கூலிக் கணக்கை 
கொடுக்காது பெருக்கிட, 
மூலக் கணக்கு 
மூளையின் பலமாம்! 

மூலையில் ஒருநாள் 
முடங்கிப் படுத்திட, 
மூளையின் கணக்குகள் 
மூடிய கணக்காம்!. 
ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment