Friday, June 21, 2019

அண்ணே !அண்ணே!

ஆத்துக்குள்ளே மீன்பிடிக்க ஆத்தத்தேடி போனேண்ணே! 
ஆத்தாவோட மடியில்கூட அன்புவத்தி போச்சுண்ணே!  
நாத்துநட்டு வச்சாலும் நெல்லுயெங்கே நெலைக்குதுண்ணே! 
பாத்துபாத்து வளத்தாலும் பசங்கபாடு பெரும்பாடுண்ணே ! 
காத்துக்காத்து நிக்கையில காலமெங்கே கனியுதுண்ணே! 
காத்துக்கறுப்பு மனுஷன்கிட்ட அண்டக்கூட கதறுதுண்ணே! 
சாத்திவச்ச கதவுதெறந்து,திருடன்கூட திரியுதுண்ணே! 
மாத்துத்துண்டு மாறிமாறி தோளுமேல திமிறுதுண்ணே! 
வாத்துமடையன் வால்மொளச்சு வானத்துல பறக்குறாண்ணே! 
நீத்துப்போன கனவெல்லாம் நெஞ்சவந்து அடைக்குதுண்ணே! 
தீத்துவைக்கா பிரச்சனைகள் தேள்கொடுக்கா தொரத்துதுண்ணே! 
ஊத்துவத்தி போகையில,ஊரசுத்தி ஓலமுண்ணே !  
ஊத்துக்குளி வெண்ணயின்னா,ஊர்மணக்கும் பேருதாண்ணே! 
தூத்துக்குடி பேரச்சொன்னா துப்பாக்கி ஒலிக்குதுண்ணே!  கூத்துப்பண்ணும்  அரசியல பாத்துபாத்து சலிக்குதுண்ணே! 
மூத்தவங்க பேச்சுகூட மொதவறி போகுதுண்ணே! 
பூத்தமலரு வாடலேன்னா பூத்ததெல்லாம் பொய்யிண்ணே
நூத்துக்கு நூறுயிங்கே,நடப்பதெல்லாம் நெசமில்லேண்ணே
நேத்துப்பாத்த நல்லதெல்லாம் நேத்தோட போச்சுதுண்ணே! 
சேத்துவச்ச பணத்தப்பத்தி  செத்தவங்கிட்ட கேளுண்ணே!
சேத்துக்குள்ள பொரண்டபின்னே சுத்தங்கூட சாபமண்ணே !
வேத்தவுடம்பு வலியெடுக்க,வேதனையே மிஞ்சுதுண்ணே! 
சோத்துக்குள்ளே மறச்சதெல்லாம் பூசணியாய் மாறுதுண்ணே!
போத்துபோல பெருத்தவன,புத்தியறுத்து ஓடுதுண்ணே! 
தோத்துப்போன பின்னாலே தூத்துறதே வழக்கமுண்ணே! 
கோத்தமாலை எல்லாமே  கொரங்குகையில சிக்குதுண்ணே!   
சாத்தானோட சமபந்தி சாப்பிடுவோர் சாட்சியிண்ணே! 
காத்தவன காலால்மிதிச்சு,கடக்குறதே கலியுகம்ணே!  
ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment