Monday, June 17, 2019

இல்லைக்கு எல்லை இல்லை.

நல்லவர் சொல்லென்றும் நலங்கெட்டுப் போவதில்லை;
அல்லல் மொழிந்துரைக்க,அந்நியமொழி ஏற்பில்லை;
தீயோர் வழித்தடங்கள் தெருமுனைத் தொடுவதில்லை;
பேய்க்கென மரமொன்றும்,பேர்சொல்லி வளர்வதில்லை.

கொல்லன் பட்டறையில் குளிர்காற்றிர்க் கிடமில்லை ;
முல்லைக்கு மமென்றும்,மல்லியால் வருவதில்லை.
பெய்யாத மழைக்கொன்றும்,கார்மேகக் கறையில்லை;
பொய்யான கதைகளுக்கு,புதுப்பதிவுத் தேவையில்லை.

புல்லார்ந்த பூமிகூட பொலிவினை  இழப்பதில்லை ;

நில்லென்றால் நின்றிடின்,அதன்பெயர் நதியில்லை.
சயனமது சூழ்ந்தாலும் சாரதிக்குத் தூக்கமில்லை; 
நயனங்களின் நாட்டியத்தில் நளினம் தோற்தில்லை. 

பொல்லாத பொருள்கூறி,பெருமைகள்  பூப்பதில்லை;
செல்லாத பணத்திற்கும் செல்லும்வழி தடைகளில்லை.
முயலுக்கு வேகத்தடை,முட்டுக்கட்டை ஆவதில்லை; 
வயலுக்கு வரப்பின்மேல் வழக்குக லொன்றுமில்லை. 

வில்லோடு அம்பிணைந்து  எல்லையைக் கடந்தாலும், 
வல்லானின் வீம்பதற்கு,எல்லைக்கல் பொறுப்பில்லை. 
நயங்குன்றி நலிந்தோர்க்கு நான்கெல்லை எட்டாகிடின், 
பயன்படா பாதையிலே,பயணங்கள் பொருத்தமில்லை.
ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment