Tuesday, March 19, 2019

எழுந்திட விழு!

பள்ளத்தில் விழுந்திட பஞ்சாங்கம் பார்ப்பரோ?
பாதத்தில் விழுந்திட பயிற்சிகள் பெருவரோ?
காதலில் விழுந்திட காவிகள் உடுப்பரோ?
நாதத்தில் விழுந்திட நாட்டியம் பயில்வரோ?

பூரண கும்பம் முன்னால் விழுந்து
சரணம் சிந்தையில் சாட்சியாய் நிறுத்தி, 
காரணம் மறந்து கனிந்துத்  தொழுதிட,
ஊருணி போல்மனம் உவகை பெருமாம்.

விழுதல் அனைத்துமே விபத்துகள் அல்ல;
பழுதிலா விழுதலே பரவசம் கூட்டும்.
எழுதிய புண்ணியம் இசைந்திட வாழ்ந்திடின்,
விழுந்திடும் வேளையில் விழுமிடம் காக்கும்.

தாய்மையின் பாதம் தரணியே தொழுமெனில்,
வாய்மையில் விழுதலே வாழ்வில் எழுச்சியாம்! 
பணிவுடன் விழுந்து பக்குவம் போற்றிடின்,
துணிவுடன் எழுதலே தூக்கிடும் ஏணியாம்! 
ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment