Tuesday, September 25, 2018

பூக்குமோ பசுந்தமிழ்?

ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும்
பூத்துக் குலுங்கிய பசுந்தமிழ்  நாட்டில்
பார்த்துப் படிக்கவும்,சேர்த்து எழுதவும்,
ஈர்த்திடப் பேசவும்,இயலாத் தலைமுறை, 
சாத்திரத் தோடு சரித்திரம் மறந்து, 
சூத்திரம் பலவும் சுடச்சுடக் கற்று, 
சாத்தான் தோள்களில் சாய்வது மேனோ? 
மூத்தோர் காத்த முதுமொழி யிங்கே,
மாத்துத் துணிக்கே மாய்ந்திடும் மனிதராய்,
நீர்த்துப் போகையில் நெஞ்சம் குமுறுதே!
குத்தகை வாழ்வின் குறிக்கோ ளனைத்தும், 
கூத்தும் களிப்பென,குறுகிய பாதையில்,
நாத்துகள் துவண்டு,துளிர்ப்பது போல,
செத்துப் பிழைத்திடும் செம்மொழி கண்டு 
ஆத்துப் பறந்து,காத்துக் கிடக்கவோ,
பூத்திடும் மீண்டும் பசுந்தமி ழென்று !
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment