Saturday, March 12, 2022

கூத்தாடி

ஆலயத்தில் சிவனாண்டி; 

வீதியில் கழைக்கூத்தன்.  

தெருக்கூத்தில் ராஜப்பார்ட்;

நாடகத்தில் நாட்டரசன். 

திரையில் கலைப்பிரியன்.

அரசியலில் ஆணவத்தான்.

மதக்கூத்தில் மலையேறி; 

மதுக்கூத்தில் மிருகமவன். 

இல்லத்தின் கூத்தெல்லாம் 

உள்ளத்தில் களைகட்டும்!.

வழுக்கி விழுகையிலும்

வாட்டமாய்க் கூத்தாடி, 

கூட்டம் திரட்டிடுவான்.  

அரிதாரம் பூசாமல் 

அன்றாட வாழ்க்கையிலே,  

வக்கனையாய் நடித்து  

வரிசைகட்டி ஆடுபவன்,

திரையில் நடிப்பவரை 

'கூத்தாடி'எனச்சொல்லி,

கூசாமல் ஏசிடுவான்.

வடகலையும்  தென்கலையும், 

இடைப்பட்ட நடுகலையும்,

கொடிகட்டி கூத்தாட, 

திரையின் ஆட்டமெல்லாம் 

அறையின் அம்பலமே!      

ப.சந்திரசேகரன்.    

No comments:

Post a Comment