Monday, January 21, 2019

வெளுக்குமோ கிழக்கு !

வெளுக்குமோ கிழக்கு வெளியேற்ற அழுக்கு ?
வெளுத்தது பாலென நினைப்போர் தமக்கு,
பளிச்செனப் படுமோ பாவிகள் படலம்?
ஒளித்தது எல்லாம் ஒருநாள் வெளிவர,
வெளிச்சத் தீயினில் வேடங்கள் மாயும்.
இளித்திடும் பொய்யரின் ஈனக் கறைகளை துளிர்த்திடும் தூய்மை துவைத்தே கரைக்கும் . 
உளிகள் மட்டுமே சிற்பங்க ளாகுமோ?
சுளுவுடன் செதுக்கிடும் சிற்பங்க ளூடே, 
ஒளியுடன் காண்பது ஓங்கிய கரமே!
தெளிவுறும் அறிவென தெறித்தநல் சூரியன் 
அளவிலா அதிர்வுடன் கதிர்களாய்த் தோன்றி,
கிளைகளாய் அடர்ந்த குழப்பம் களைந்து, 
சளைக்கா முயற்சிகள் சான்றுக ளாக்கும்.
விளையும் பயிர்கள்,விதைகளின் வீறுடன்,
அளித்திடும் நன்மைகள்,ஆதவன் கணக்கே! 

ப.சந்திரசேகரன் .        

No comments:

Post a Comment