Tuesday, June 16, 2026

நெல்லுக்குள் அரிசியனெ

   
                      நண்பருக்கு அஞ்சலி.
                              16th June 2026

முகத்தில் முறுக்கேறிடினும்

அகத்தில் ஓர் குழந்தை நீ!

வகுப்பினில் நீ நுழைய,

வானரமும் வால்சுருட்டும்.

கரும்பலகையில் நீ கைபதிக்க

கணிதமே களிப்புறும்.

வெறும்பேச்சு பேசாது

வேலையை நீ பார்க்கையிலே,

குறும்பை தள்ளிவைத்து

குதூகலமாய்ப் குவித்திடுவர்

புதுக்கணித மலர்கள்பல.

நிமிர்ந்தநடை நீநடக்க,

அமர்ந்தவரும் நின்றவரும்

மாணவர் என்றிருப்பின்,

மரியாதை உனக்களித்து

மடமடவென் றோடிடுவர்.

போலித்தனம் ஒருபோதும்

ஆலிங்கனம் செய்ததில்லை,

ஆசிரியன் உன்னிடத்தில்!

அன்பரும் நண்பரும்

அண்டிடுவரும் தேனடையாய்,

என்றென்றும் நீயிருந்தாய்.

காலம் உன்பாதையிலே

கருவேலம் முட்களிட,

கால்வலுவும் மனவலியும்

கடந்துநீ எதிர்கொண்டாய்,

காலனின் கணக்குவழி.

ஞாலத்தில் நல்லோர்க்கு

கோலங்கள் மாறிடினும்

நல்லவர்கள் நெஞ்சத்தில்

நிலையாகக் குடியிருப்பர்.

நல்லவனாய் வாழ்ந்த நீ

நெல்லுக்குள் அரிசியனெ

நெஞ்சமெலாம் நிறைந்திருப்பாய்.

ப.சந்திரசேகரன்.

1 comment: