Monday, February 10, 2020

வம்பு

வம்புக்கு வர்ணமிகு கொம்புகள் கொண்டு,
கம்பீரக் காயங்கள் காட்டுதல் உண்டு. 
அம்பலப் டுத்தவே ஆழ்கிணறு தோண்டுபவர், 
நெம்பும்  நாவினால்,நாசூக்காய் நகலெடுப்பர். 
வெம்பியது பழமென்பர்;வேடங்கள் நிசமென்பர் . 
நம்பிக்கை நாற்றுநட,நடுத்தெருவில் உழுதிடுவர். 
கும்பிடும் கரங்களிலிலே குறும்பை குவித்திடுவர்.
செம்புக்கு சாயமிட்டு தங்கமெனத் தரம்பிரிப்பர்.  
கும்பலாய் அவர்கூட, குண்டூசி கோடரியாம்.  
கம்பியிலா தந்தியென கதைகள் கரைபுரள, 
அம்பெனத் தாக்குவதே,அவதூறுச் செய்திகள்.
கம்பனைக் கவிழ்த்திடவே கூத்தன் கோலூத  
அம்பிகா பதியின்  அருங்காதல் அழிந்ததே! 
தம்பியாய் தமயனாய் தாய்வழி நின்றோரை,
பம்பை உடுக்கையுடன் பகைத்திரியை ஏற்றி,  
கம்புகள் சுழற்றும் காளைகளாய் மாற்றலே, 
வம்புகள் புரிவோரின் வாடிக்கை நடப்பாம்! 
அம்பலின் அப்புகள்,அடுக்குமாடி ஆகுமாம்.
எம்பகை உம்பகை எரியூட்டில் எழும்பிடவே ,
சம்பவங்கள் சதிராட ,சர்ச்சைகளே சரடாம். 

குறிப்பு:- 
அம்பல்- அவதூறு வதந்திகள். 'calumny' in English
ப.சந்திரசேகரன் 



2 comments:

  1. வம்புகள் புரிவோரின் வாடிக்கை நடப்புகளை தரம் பிரித்து காட்டிய வரிகள் பொருள் பொதிந்தவை. சரடான சர்ச்சைகளை விட்டொழிந்தால் சதிராடும் சம்பவங்கள் சமாதி ஆகிப்போகும்

    ReplyDelete