Wednesday, December 4, 2024

மாற்றான் தாய்.

வாடகைத் தாய்கள் 

பெருகிடும் நாட்களில் 

'மாற்றான் தாயெனல் 

தோற்றிடும் கூற்றோ? 

பிள்ளைகள் பெறுதலே 

பெருஞ் சுமையாகிட, 

மாற்றான் தாய்களின்

முலைப்பால் பெருகுமோ?

துன்பம் புகுந்திட 

பின்பல மாவது 

தன்பலம் என்பர், 

தவித்திடும் மறவர்.

மாற்றான் தாயின் 

மடியது  பொய்த்திட

மடி ஏந்திடாது

மடிவது மேலாம்!

முடியாது எனுமோர் 

கடுஞ்சொல் கடந்து

கொடுத்தோம் எனும்சொல்

கூசாது கூறலும், 

கூடிக் களித்திட

கொட்டகையில் திரளலும்

கெட்டதோர் மனிதமே!

வஞ்சனை வெற்றிலை 

வாயில் மென்று, 

நெஞ்சினில் ஈரம் 

கொஞ்சமும் இன்றி, 

குதர்க்கம் பேசிடும் 

கொற்றவர் பிடியில், 

வென்றவர் யாரோ 

வேதனைப் போரில்?

ஓர வஞ்சனை

ஏறிடும் பல்லக்கு, 

பாரம் ஏற்றுதல் 

பாமரன் தலையிலாம்!

இன்னல் குளத்தில் 

மூழ்கிடும் மாந்தரில்,

ஈனக் குரல்கள் 

எழுந்து நிற்குமாம்,

பல்லக்கு தூக்க!

சொந்தத் தாயே 

சுருக்குக் கயிறெனில்,

மாற்றான் தாய்க்கு 

மனவலி  ஏதாம்?

ப.சந்திரசேகரன். 


1 comment:

  1. *பால் நினைந்தூட்டுவதில் மாதம் பத்து சுமந்து பெற்ற தாய்க்கு அப்புறம் தானே மற்ற தாய் மார்கள் எல்லோருமே* ?

    ReplyDelete