Sunday, January 14, 2024

சமத்துவப் பொங்கல்.

(இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.)

நிலத்தை வணங்கிட நலமெலாம் பொங்கும்.

பலத்தினைக் காட்டும் மழைநீர்க் கிடையே,

இலக்குகள் தகர்க்கும் இயற்கை இடர்களை,

தலைக்குள் பொங்கிடும் துணிச்சல் தாங்கும்.


பயிர்கள் வாழ்தலும்,பதர்களாய் வீழ்தலும்,

உயிர்வின்,தாழ்வின்,ஊர்வலச் சூழலாம்.

பயி்ற்சியும் அயர்ச்சியும் படர்ந்த வாழ்வில்,

முயற்சி பொங்குதல்,முதிர்ச்சியின் நிழலாம்.



வலமோ இடமோ,வாழ்வின் நகர்வில்   

வலிகள் பொங்குதல்,வெற்றியின் முகமே!

சிலந்திகள் சுரந்து பின்னிடும் வலைகளும்,

கலைகள் பொங்கிடும் காவியக் கதையே!


வியர்வைத் துளிகள் துள்ளிப் பொங்கிட,

பயிரும் உயிரும் பாரினில் செழித்திடும். 

வயிற்றினுள் பசியின் பொங்குதல் தங்கி,

பயிற்றிடும் பாடமே,சமத்துவப் பொங்கலாம்!. 

ப.சந்திரசேகரன்.



1 comment:

  1. ."........வயிற்றினுள் பசியின் பொங்குதல் தங்கி,
    பயிற்றிடும் பாடம்....." பொங்கல் இடையே சுவை தரும் முந்திரி, திராட்சை...

    ReplyDelete