Saturday, July 16, 2022

சிறைகண்ட சொற்கள்.

சொற்களின் சோகத்தில்

மொழியது மூச்சுமுட்ட.,

''பாராட்ட மட்டுமே

பெற்றெடுத் தாயோ"

எனச்சொல்லிப் புலம்பி,

மொழித்தாயின் கரங்களிலே,

சொற்கள் மூக்குச்சிந்தும்.

"எத்தனையோ பிரசவித்தேன்;

எழுந்துநின்று  முழக்கமிட,

எதற்கும் திராணியில்லை!''

எனக்கூறும் மொழியண்ணை.

"சட்டத்தால் சங்கறுத்து,

விட்டத்து பல்லிகளாய்

மாற்றிவிட்டர்,மறுப்பளித்து"

என்றிடும் சொற்களிடம்,

"நல்லதெது,கெட்டதெது, 

நானறிவேன் நிழல்கூட;

பொல்லாதோர் செயலெல்லாம்

வல்லமைச்சொல் வரையறுக்க,

வழியற்ற வார்த்தைகளாய்

வாசலின் நிற்கின்றீர்!"

எனச்சொல்லி மொழிமுனகும்,

"தரம்பிரிக்கும் தடைக்கற்கள்

நிரம்பிவரும் வேளையிது.

தீயாரை தினம்காண்போம்;

தீவிரச்சொல் அவர்நோக்கி,

தீண்டினால் தீர்ந்திடுவோம்.

தவமிருந்து  நீபெற்றாய்.

தற்குரிகளாய்ப் போனோம்.

அவமானம் அடைகின்றோம்

அவைதனில் சிறையுண்டு.

எங்களுக்குச் சிறைவைத்தால்,

உனக்கேது சிறப்பிங்கே"

எனப்பொரியும் சொற்கள்,

சிணுங்கிச் சங்கடத்தில்!.

"காலங்கள் மாறிடவே,

கோலங்கள் தான்மாறும்;

காத்திருக்கும் வேளையிலே 

பூத்துவரும் புதுச்சொற்கள்,

பூரிப்பை பரப்பிடுமே,

தாய்மைக்கும் வாய்மைக்கும்".

எனும் பொறுமையுடன்,

முடித்துவைக்கும் மொழித்தாய்.

ப.சந்திரசேகரன்.








No comments:

Post a Comment