Monday, August 3, 2020

கண்ணீர் கதகளி

கண்களில் கண்ணீர் கதகளி ஆட்டம்; 
காரணம் கரைந்து  காரியம் கூட்டும். 
பண்களில் படரும் உணர்வின் ஊட்டம், 
போரிடும் களமென காட்சிகள் காட்டும்; 

ஆனந்த அதிர்வுகள் ஆர்ப்பரித் தாடவும், 
தானந் தர்மத்தின் பலனெனக் கூடவும், 
வானந் தெளிவுற சிதறிடும் மேகமாய், 
பானந் தெளித்தலோ கண்ணீர் கோலம்? 

சோகம் அடர்ந்து சொடுக்கிய சிந்தனை, 
வேகம் எடுத்து விளம்பரப் படுத்திட, 
ஊகம் ஒளித்து,ஊற்றெனப் பெருகிடும், 
தாகம் தணிக்கா,திரவமோ விழிநீர்?.
  
உதைக்கும் நிகழ்வுகள் உலக்கை போன்று  
பதைக்கும் நெஞ்சினை உரலென மாற்றிட, 
சிதைவுறும் சிரசது நர்த்தனம் புரிகையில், 
கதைகள் சொல்லுமோ,கண்ணீர் கதகளி?. 
 ப.சந்திரசேகரன்.

No comments:

Post a Comment