Friday, February 20, 2026

கிழவனும் கிழவியும்

கிழவன்  மறப்பான், 

கிழமைகள் தனையே. 

கிழவி அறிவளோ,

கிழவன் நிலைமை. 

கழுவிடும் மீன்களில்

நழுவிடும் மீன்களென,

வழுக்கிடும் கிழமைகள்.

விழித்திரும் வேளையில்.

கழிந்த காலத்தின் 

கிழமைகள் தனிலே ,

கொழித்தவை எவையோ,

கழித்தவை எவையோ! 

கழித்ததும் குழித்ததும்

அழிந்து போகுமோ 

அழியா மனதில் !

வழித்தடம் பலவாம், 

வாழ்வின் வீதியில்.

விழுமியம் வழுவா

பழுதிலா படிப்பினில்,

இழித்ததும் இல்லை; 

பழித்ததும் இல்லை;  

செழித்து வாழ்தலும் 

ஒழித்து வாழ்தலும்  

சுழித்ததோர் விதியோ

சூழ்நிலைக் கதியோ!

விழித்து விறைந்து

உழைத்த கிழமைகள்,

கிழவனும் அறிவான்; 

கிழத்தியும் அறிவாள்.

கிழமைகள் மறப்பினும்,

பழமைகள் மாயுமோ?

முழுமையே முதுமை.       

ப.சந்திரசேகரன்.


  

1 comment:

  1. முழுமையே முதுமை. முது மையே முழுமை. 🙏🏻

    ReplyDelete