பிறந்ததும்,வாழ்வேனோ
என்றிருந்த என்
உடல்நிலையின் உள்குத்து,
பெற்றோர்க்கு பெரும்சோகம்.
வீழ்வேன் என நினைத்தாயோ?
என்பதுபோல் எழுந்தேன்,
புதுவலிமை பெற்று.
சப்பைக்கால் கொண்டு
துப்பாக்கி தூக்கியவன் நான்,
மாணவர் NCC முகாமில்!.
"பாசக்காரன் அவன்"
என்பது தந்தையின் சான்றிதழ்.
"கண்ணா" என்று
அழைத்திடும் அம்மாவுக்கு,
சந்தைக்குச் செல்கையில்
சத்தமில்லா எடுபிடிநான்.
கல்லூரி படிக்கையிலே,
என்சுமையை தன்சுமையாய்
சைக்கிளில் பலநாள்
என்னைச் சுமந்தார்,
என் அண்ணன்!
அவரின்றி.எனக்கில்லை
முதுகலை மேற்படிப்பு.
'சைக்கிள்' என்றதும்
இளமைக் கால
இனிமைத் தோழன்
மனோகரமாய் மனமுவந்து
பலநாள் என்னை
முன்னும் பின்னும்
அமரச் செய்து
மூச்சு வாங்க
சைக்கள் மிதித்தது,
பசுமை நினைவாய்
பளிச்சிடும் நெஞ்சினில்!.
பணியில் சேர்ந்ததும்,
சைக்கிளில் சுமந்து
திரைப்படம் காண
திரட்டிச் சென்ற
நறுமலர் நண்பர்,
நெஞ்சில் நிறைவார்!
'சுகவாசிடா நீ'
என்றுக் கூறி,
மனசாட்சி என்னை
மனச்சுமை ஏற்றி,
மண்டியிடச் செய்யும்.
இளமைக் கால
இளகிய மனசு,
இறுகிப் போனது
இருபதுக் கிடையில்!
இறுக்கம் தந்தவர்
கிறித்துவ நண்பர்.
''சந்திரா !சந்திரா!,
உந்தப் படுகிறாய்
உணர்ச்சியில் நீ!
பரந்த மனதில்
கிரங்கிப் போகிறாய்!''
என்று சொல்லியே,
பழுக்கக் காய்ச்சினார்
பழக்கப் பாதையை!
(Yes!.''You are carried away
By extreme emotions
Or by generosity''.
This is what he said)
இளகிய மனது
இரங்கித் துடிக்கையில்,
இளைப் பாற்றினார்,
தலைக்கு மடிதந்த
இஸ்லாமிய நண்பர்.!
'அவன்தான் மனிதன்'
படத்தைப் பார்த்த
இன்னொரு நண்பர்.
" 'பழைய சந்திரனை'
படத்தில் பார்த்தேன்.
புவனேஸ்வரி தியேட்டரில்"
என்று எழுதினார்,
கடிதம் ஒன்றினை !
அமரரான அந்தநண்பர்
கணிதம் துறந்து,
வணிகம் விஞ்சினார்.
"அதிஷ்டக் காரன்டா"
என்றென்னை அழைத்தார்,
மூத்த நண்பர்.
இல்லற வாழ்க்கை
இனிதே அமைய,
எனக்கொரு வரமாய்
அமைந்தவர் அவரே!
மனசின் கனத்தினை
மூட்டைக் கட்டினார்,
மனைவியாய் வந்தவர்.
அவரின் வரவால்
விரக்தியின் இரங்கட்பா,
வீரியம் கண்டது,
வாழ்நாள் முழுவதும்!
மனை மாட்சியும்
மக்கட்பேறும்,
மனிதனின் வாழ்வில்
மாபெரும் தவமே!
வகுப்பறை வாசம்
ஆசிரியன் எனக்கு
எண்ணத்தால் சிறகடிக்கும் ,
வண்ணத்துப் பூச்சியாய்!.
பாரம் நிறைந்திட
ஈரம் குறைவதும்,
பாசம் பெருகிட
மனம் கனிவதும்,
மாறிடும் உணர்வின்
கூறாக் குறைகளே!
மற்றவர்க்காக மனமிறங்கிட,
முற்றிய வினையும்
முடிவுரை கண்டது.
தனக்கென எதுவும்
கோராக் கூர்வாள்
பிறர்க்கென போர்ப்பல
குரல்வழிப் பாய்ந்தது.
நல்லதோர் நட்பும்
நல்வழிப் பாதையும்,
நாற்திசைப் பயணமே!
மல்லாந்து படுத்து
மனதார உறங்குதல்,
கல்லான மனதும்
கனிவுறும் காலமே!
பொல்லாத மனிதரும்
மல்லாந்து படுத்து
மாதங்கள் க(கி)டப்பது
மரணத்துக்குக் காகவெனின்,
மெல்லிய மனதை
கொல்லாமல் கொல்லுமே,
நில்லாத வாழ்க்கை!
எல்லோரும் போல
இன்றுநான் நினைப்பது,
சொல்லாமல் ஒருநாள்
இல்லாமல் போவதே!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment