Tuesday, August 19, 2025

மனசாட்சி

மனசாட்சி ங்கினால்

மதில்மேல் பூனை; 

குருட்டுப் பூனைக்கு, 

இருட்டொரு பாரமில்லை! 

சாட்சிக்கூண்டில் பலநேரம், 

பொய்சாட்சி ஆலாபனை. 

ஆயுதங்கள் கூர்மையானால், 

அறிவு மழுங்குகிறது; 

தீர்ப்புகளின் கூர்மை, 

ஆயுதக் கூர்மையை 

ஆய்வு செய்கிறது.

வாதி பிரதிவாதிகளுக்காக 

வழக்காடும் குரல்களுக்கு, 

நாசுக்கும் நளினமுமே 

பாசாங்குப் பரப்புரை! 

'சட்டம் ஒரு இருட்டறை'; 

'தீர்ப்புகள் திருத்தப்படலாம்'; 

'நீதிக்குத் தண்டனை'. 

திரைப்பட தலைப்புகளே! 

உறங்கும் மனசாட்சி 

நீதியைத் தாலாட்ட, 

தீர்ப்புகள் தேய்வுறும் 

மனசாட்சி மாண்புரின், 

தீர்ப்புகளின் திவ்யதரிசனம்,

புனிதப்பயணத்தின் பின்புலம். 

நல்லவனைத் தாலாட்ட, 

நீதிமன்றம் மெத்தையில்லை !

நீதியின் மடியென்றும் 

தீயவனின் தெருக்கூத்துமேடை. 

மனசாட்சிக் கும்பகர்ணன் 

மல்லாந்து படுத்துறங்க,

நீதியின் தொட்டிலில் 

நிம்மதியாய்க் கிடப்பராம்,

நீள்புவியின் நீசரெல்லாம்! 

ப.சந்திரசேகரன்.

No comments:

Post a Comment